3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே சர்வதேச விளையாட்டு போட்டிகள் குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், வரும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் தொடரை இசிபி திட்டமிட்டுள்ளது. இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெற்றால், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு நடத்தப்படும் முதல் சர்வதேச தொடர் என்ற பெருமையை பெறும்.
பென் ஸ்டோக்ஸிற்கு கேப்டன் பதவி
இந்நிலையில், வரும் ஜூலை மாதம் 8ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் தொடருக்கான தேதிகள் மற்றும் இடங்கள் குறித்தும் இசிபி தற்போது அறிவித்துள்ளது. ஆனால் அந்த நேரத்தில் கேப்டன் ஜோ ரூட்டின் மனைவி தன்னுடைய இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க உள்ளதால், ஜோ ரூட்டிற்கு பதிலாக துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸிற்கு கேப்டன் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவருக்கும் உதாரணம்
இதனிடையே, பென் ஸ்டோக்ஸிற்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டால் அவர் அருமையாக செயல்படுவார் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார். துணை கேப்டனாக அவர் அனைவருக்கும் ஒரு உதாரணமாக செயல்பட்டு வருவதாகவும் ஆல் ரவுண்டராக பௌலிங், பேட்டிங்கில் தனித்து செயல்படுவதாகவும் ஜோ ரூட் மேலும் கூறியுள்ளார்.
பயிற்சிகள் வித்தியாசமாக உள்ளது
அவர் மற்றவர்களை தன்னிடம் ஈர்த்து அவர்களிடம் இருந்து சிறப்பானவற்றை பெறுவதில் வல்லவர் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்படுவது சிறப்பானது என்று தெரிவித்துள்ள ஜோ ரூட் கடந்த திங்கட்கிழமை முதல் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, தற்போது நடத்தப்படும் பயிற்சிகள் முற்றிலும் வித்தியாசமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.