ஸ்பின்னர்கள் ஆதிக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், போட்டி 2 தினங்களில் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது.
முன்னாள் வீரர்கள் விமர்சனம்
இந்நிலையில் இந்த போட்டி மற்றும் மைதானத்தின் பிட்ச் குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் தொடர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதனிடையே, நரேந்திர மோடி ஸ்டேடியம் டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கு உரியதாக இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
பனேசர் விமர்சனம்
மேலும் அடுத்ததாக வரும் 4ம் தேதி அதே மைதானத்தில் 4வது போட்டி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினமும் இதேபோல நடந்தால் இந்தியாவின் புள்ளிகளை குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3வது போட்டி இங்கிலாந்தில் நடைபெறும் கிளப் போட்டிகளை போல இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பார்க்கில் நடத்தியிருக்கலாம்
உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக மிகவும் சிறப்பான வகையில் நரேந்திர மோடி ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ள பனேசர், அங்கு நடத்தப்பட்ட டெஸ்ட் போட்டி இரண்டு தினங்கள் நடைபெற்று முடிந்தது ஏமாற்றத்தை அளிப்பதாகவும், அதற்கு பதிலாக ஒரு பார்க்கில் இந்த போட்டியை நடத்தியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.