வாழ்க்கையை இனிமையாக கழிக்கும் ஜோடி
கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் மனமொத்த தம்பதிகளாக வலம்வந்துக் கொண்டுள்ளனர். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக ஆதர்ச தம்பதிகளாகவும் இவர்கள் உள்ளனர். தங்களது கேரியரில் ஒருவருக்கொருவர் இந்த ஜோடி சரியாக உதவி செய்துக் கொண்டு வாழ்க்கையை இனிமையாக்கி கொண்டுள்ளனர்.
விராட்டை மாற்றிய அனுஷ்கா
தன்னுடைய மனைவி குறித்து எப்போதுமே விராட் கோலிக்கு பெருமிதம் உண்டு. அதை அவ்வப்போது பல்வேறு பேட்டிகளின்போது வெளிப்படுத்தி விடுவார். அதேபோல தற்போது சக வீரர் மயங்க் அகர்வாலுடன் மேற்கொண்ட 'ஓபன் நெட்ஸ் வித் மயங்க்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற விராட் கோலி, அனுஷ்கா சர்மாவை தான் சந்தித்திருக்காவிட்டால், தான் தற்போது இருப்பதுபோல சிறப்பாக இருந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
முழுபுகழும் அனுஷ்காவிற்கே
தன்னை சிறப்பான மனிதனாக மாற்றியதற்கான முழு புகழும் தன்னுடைய மனைவி அனுஷ்காவையே சேரும் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஒரு விளையாட்டு வீரராக தன்னுடைய பொறுப்பு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது உள்ளிட்ட விஷயங்களை அனுஷ்காவிடம் இருந்தே தான் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
கேக் செய்து கொடுத்த விராட்
மற்றவர்களுடன் மனம்விட்டு பேசும் பழக்கம் இல்லாத தன்னை சிறப்பான மனிதனாக மாற்றியது அனுஷ்காதான் என்றும் விராட் பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கடந்த வாரம் பேசிய விராட் கோலி, தன்னுடைய மனைவி அனுஷ்காவின் பிறந்த தினத்தில் அவருக்கு தான் ஒரு கேக்கை தயார் செய்து கொடுத்ததையும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார்.