எச்சிலை பயன்படுத்த தடை
கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் தொடர்ந்து ஆட்டத்தை நிகழ்த்திவரும் சூழலில், கிரிக்கெட் ஆட்டத்தில் சில வழிமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர ஐசிசி சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது. அதில் முக்கியமாக பந்தை ஷைன் செய்வதற்கு எச்சிலை பயன்படுத்த தடை விதித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வியர்வையை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டின் சுவாரஸ்யம் குறையும்
இந்நிலையில் ஐசிசியின் இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் பல முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய பாரம்பரிய வழிமுறைகளை மாற்றியமைத்தால் கிரிக்கெட்டின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய ஜாம்பவானும் துவக்க ஆட்டக்காரருமான மேத்யூ ஹேடன், இதை வேறுவிதமாக அணுக அறிவுறுத்தியுள்ளார்.
எச்சில், வியர்வை பயன்படுத்த அனுமதிக்கலாம்
கொரோனா பரவலை தடுக்க சுத்தமாக எச்சிலை பயன்படுத்துவதை தடை செய்வதைக்காட்டிலும், போட்டிக்கு முன்னதாக வீரர்களுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு உறுதி செய்யப்பட்ட பின்பு அவர்கள் எச்சில் மற்றும் வியர்வை இரண்டையும் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நல்ல பலனை அளிக்காது
காலி மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் முடிவு நல்ல பலனை அளிக்காது என்றும் ஹேடன் தெரிவித்துள்ளார். விளையாட்டில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் பார்வையாளர்களே என்று கூறியுள்ள அவர், காலி மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது நன்றாக இருக்காது என்றும், விளையாட்டின் அழகே போய்விடும் என்றும் மேலும் கூறியுள்ளார்.
வித்தியாசம் இருக்காது
இதனிடையே தன்னுடைய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் சர்வதேச போட்டிகளில் மீண்டும் இணையும் விருப்பத்தை கொரோனா வைரஸ் கெடுத்து விட்டதாக ஹேடன் குறிப்பிட்டுள்ளார். தோனி ஓய்வு பெற விரும்பினால் அது ஐபிஎல் போட்டிகளுக்கு பின்பாகவும் இருக்கலாம், அல்லது சர்வதேச போட்டிகளுக்கு பின்பாகவும் இருக்கலாம். அதில் ஒன்றும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.