கொல்கத்தாவில் கோலாகல துவக்கம்
இந்தியா -வங்க தேச அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மோதவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டி, சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இந்த போட்டியை ஆடும் 9வது நாடாக இந்தியா உள்ளது.
விளையாட மறுத்த இந்தியா
கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு போட்டிகளை விளையாடியது. அப்போதே பிங்க் பந்தில் விளையாட இந்தியாவிடம் கேட்கப்பட்டது. ஆனால் இந்திய அணி அப்போது மறுப்பு தெரிவித்தது.
சிறந்த பயிற்சி வேண்டும்
இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள இந்திய கேப்டன் விராத் கோலி, ஒரு பெரிய அணிக்கு எதிராக எந்தவித முன் அனுபவமும் இன்றி அத்தகைய போட்டியை உடனடியாக எதிர்கொள்ள முடியாது என்றும் அதனாலேயே மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக திட்டமிட வேண்டும்
இரண்டு நாளில் முடிவு செய்து ஒரு வாரத்தில் விளையாட வேண்டும் என்று தெரிவித்தால், பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது என்பது இயலாத காரியம் என்று தெரிவித்துள்ள கோலி, இதற்கு முன்னதாக திட்டமிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிங்க் பந்து போட்டியை விளையாட தயார்
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டூரில் பிங்க் பந்து விளையாட்டை முறையான பயிற்சி ஆட்டத்துடன் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டால், விளையாட இந்திய அணி தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகுந்த சவாலான விஷயம்
தற்போது விளையாடப்படவுள்ள பகலிரவு பிங்க் பந்து போட்டிகள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல் என்று தெரிவித்துள்ள கோலி, இந்த விளையாட்டு இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கேட்ச்கள் தவற வாய்ப்புள்ளது
பிங்க் நிற பந்துகள் சாதாரண பந்துகளை விட எடை அதிகமானது என்று தெரிவித்துள்ள கோலி, இதனால் கேட்ச்கள் தவற வாய்ப்புள்ளதாகவும், வீரர்கள் அதிக திறனை செலவழித்து இந்த பந்தை கையாள வேண்டிய அவசியம் உள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.