இயற்கையின் ஒத்துழைப்பு
ஆனால், நாளை அரையிறுதி போட்டியை ஆடாமலே, இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது. அதற்கு இயற்கையின் ஒத்துழைப்பு அவசியம். அதாவது மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால் இந்தியா பைனலுக்கு சென்றுவிடும்.
விளையாடிய மழை
அது எப்படி என்று கொஞ்சம் பார்ப்போம். இந்த உலக கோப்பையில் வீரர்கள் விளையாடினார்களோ இல்லையோ, மழை பல ஆட்டங்களில் நன்றாக விளையாடி இருக்கிறது. இந்தியாவும் ஒரு போட்டியை இழந்திருக்கிறது. 45 ஆட்டங்களில் 7 போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. 3 போட்டிகள் டக்வொர்த் லீவிஸ் முறையில் முடித்து வைக்கப்பட்டன.
வானிலை மையம் தகவல்
அதே மழை தான் மான்செஸ்டரில் நாளை பெய்ய வாய்ப்பிருப்பதாக பிரிட்டன் வானிலை மையம் அறிவித்திருக்கிறது. நாளை மான்செஸ்டரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் கூறி இருக்கிறது. ஒருவேளை மழை பெய்து, அரையிறுதி ஆட்டம் தடைபட்டு, மற்ற லீக் போட்டிகளை போல ஆட்டம் நிறுத்தப்படாது.
மாற்று நாள் ஏற்பாடு
ஏன் என்றால், மற்ற ஆட்டங்களை போல அல்லாமல், அரைஇறுதி அல்லது இறுதி போட்டிகள் பாதிக்கப்பட்டால், மீண்டும் விளையாட மாற்று ஏற்பாடாக மற்றொரு நாள் ஒதுக்கப்படும். அதன்படி 9ம் தேதி மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் மறுநாளான 10ம் தேதி போட்டி நடக்கும். ஆனால், அந்த 10ம் தேதியும் வானிலை மேலும் மோசமாக இருக்கும் என்று பிரிட்டன் வானிலை மையம் கணித்துள்ளது.
அன்றும் மழை வரும்
மேலும், அன்றைய தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மதிய நேரத்தில் மழை பெய்யும் என்று பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. 10ம் தேதி மழை பெய்து போட்டி நிறுத்தப்பட்டால், வேறு வழியே கிடையாது. எந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதை அறிவித்தாக வேண்டும்.
ஆடாமல் பைனல்
இந்த இடத்தில் தான் இந்தியா எடுத்துள்ள புள்ளிகள் கைகொடுக்கும். நியூசி.யை விட இந்தியா 4 புள்ளிகள் அதிகம் பெற்று 15 புள்ளிகளோடு உள்ளது. எனவே, லார்ட்ஸில் நடைபெறும் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா நேரடியாக தகுதி பெறும். இது தான் ஆடாமலேயே பைனலுக்கு செல்லும் வாய்ப்பாகும்.
முடிவுகள் மாறலாம்
வரும் வியாழக்கிழமை 2வது அரையிறுதி நடைபெறும் எட்ஜ்பாஸ்டனில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளான வெள்ளியன்று மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் போட்டி கைவிடப் பட்டு புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் ஆஸி. பைனலுக்கு செல்லும். இங்கிலாந்தின் கோப்பை கனவு இந்த முறையும் அம்போவாகி விடும். இவை எல்லாம், மழையை முன் வைத்து வரையப்படும் கணக்கீடுகளாகும். போட்டிகள் நடைபெறும் பட்சத்தில் முடிவுகள் மாறலாம்.