வெற்றியை தீர்மானிக்கும் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கி நடைபெற்று வருகிறது. 4 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது ஆடிவரும் 4வது போட்டி வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.
5வது நாள் பேட்டிங்
இந்த போட்டியில் இந்திய பௌலர்கள் சிறப்பாக செயலாற்றி முதல் இன்னிங்சில் 362 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்சில் 294 ரன்களிலும் ஆஸ்திரேலிய அணியை சுருட்டினர். தற்போது இந்திய அணியினர் விக்கெட் இழப்பின்றி 4 ரன்களை எடுத்துள்ள நிலையில் நாளைய 5வது நாள் ஆட்டத்தை விளையாட உள்ளனர்.
டிரா மோசமானது
இந்த போட்டி டிரா ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளநிலையில், இந்த டிரா, கடந்த 2018-19ல் இந்திய அணியின் வெற்றியை காட்டிலும் மோசமானது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டுள்ளார். கடந்த தொடரில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத நிலையில், தற்போது அவர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் போட்டி டிரா ஆவது மோசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
நின்று ஆடவேண்டும்
மேலும் தற்போது ஆஸ்திரேலிய ரன்னை சேஸ் செய்ய இந்திய அணியின் துவக்க வீரர்கள் நின்று ஆட வேண்டும் என்றும், தொடர்ந்து கடந்த சிட்னி போட்டியை போல ரிஷப் பந்த் தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டும் என்றும் ரிக்கி பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல தங்களது அனைத்து திறமையையும் வெளிப்படுத்தும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்புள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.