காயத்தால் ரோகித் அவதி
ஐபிஎல் 2020 போட்டிகளின் இடையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டு அவர் இடையில் சில போட்டிகளில் விளையாடாமல் மீண்டும் விளையாடும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் தன்னுடைய அணியின் 5வது கோப்பையையும் பெற்றுத் தந்தார்.
கேள்விக்குறியான பங்கேற்பு
இதையடுத்து காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் அவர் பெயர் இடம்பெறவில்லை. தொடர்ந்து இரண்டாவதாக வெளியிடப்பட்ட பட்டியலில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவரது பெயர் இடம்பெற்றது. அதுவும் தற்போது அவரது பிட்னஸ் காரணமாக கேள்விக்குறியாகியுள்ளது.
வல்லுநர்களிடம் ஆலோசனை
தற்போது என்சிஏவில் தன்னுடைய பிட்னசை நிரூபிக்கும் வகையில் ரோகித் சர்மா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். வரும் 11ம் தேதி அவருக்கு பிட்னஸ் டெஸ்ட் எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் அவருடைய காயம் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து 3 வல்லுநர்களிடம் பிசிசிஐ மற்றும் என்சிஏ ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
விளையாட்டு குறித்து இறுதி முடிவு
ஆனால் அறுவை சிகிச்சைக்கான அவசியம் இல்லை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 11ம் தேதி எடுக்கப்படவுள்ள பிட்னஸ் டெஸ்ட்டில் சாதகமான ரிசல்ட் வரும் நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
3வது டெஸ்ட்டில் ரோகித்
வரும் 17ம் தேதி ஆஸ்திரேலியா -இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. 11ம் தேதி ரோகித்தின் பிட்னஸ் உறுதி செய்யப்பட்டாலும், தொடர்ந்து 2 வாரங்கள் அவர் ஆஸ்திரேலியாவில் குவாரன்டைனில் ஈடுபட வேண்டும். இதையொட்டியே ஜனவரி 7ம் தேதி துவங்கவுள்ள 3வது டெஸ்ட்டில்தான் அவர் விளையாட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.