சீனியர்களுக்கு ஓய்வு
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் சீனியர் வீரரான ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சீனியர் வீரர்கள் இல்லாததும், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் ஓய்வு
இதுதொடர்பாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், இந்திய அணியில் பரிசோதனை முயற்சி செய்யும் நேரம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதுகிறேன். அதனால் 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், ரோஹித் ஷர்மா ஓய்வின்றி தொடர்ந்து விளையாட வேண்டும். 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன் விடுமுறை தேவை என்றால், ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருக்கலாம்.
ஓய்வு தேவையா?
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடரில் ஷனகா தான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் இங்கிலாந்து அணிக்கும் பட்லர் தான் கேப்டனாக தொடர்ந்து செயல்படுகிறார். அதனால் ரோஹித் ஷர்மாவும் அனைத்து ஒருநாள் தொடர்களிலும் பங்கேற்க வேண்டும். தேவையென்றால் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் ரோஹித் ஷர்மா ஓய்வெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம்
இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி களமிறங்க உள்ளனர். அதேபோல் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமாக செயல்பட்ட கேஎல் ராகுல் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடர் டிச.4 முதல் டிச.26 வரை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.