அதிரடி மன்னன் சேவாக்
வீரேந்தர் சேவாக் கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருந்தார். அவரது அதிரடி ஆட்டம் துவக்க வீரர்களுக்கான பேட்டிங் அரிச்சுவடியை உடைத்து எறிந்தது. முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவது என்ற புதிய அணுகுமுறையை வெற்றிகரமாக கையாண்டார் சேவாக்.
பயம் இல்லாத ஆட்டம்
சேவாக் எத்தனை பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும் பயமே இல்லாமல் அடித்து ஆடுவதில் வல்லவராக இருந்தார். கிளென் மெக்கிராத், பிரெட் லீ, வாசிம் அக்ரம், சோயப் அக்தர் பல முன்னணி பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்திய பந்துவீச்சாளர்களையும் அப்படித் தான் அணுகினார்.
சேவாக் ரன் குவிப்பு
சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8,586 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடியவர்கள் இல்லை என்றே கூறலாம். இரண்டு முச்சதங்களும் அடித்துள்ளார். 251 ஒருநாள் போட்டிகளில் 8,273 ரன்கள் குவித்துள்ளார்.
ரஷித் லத்தீப் பேச்சு
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப், வீரேந்தர் சேவாக் குறித்து புகழ்ந்து பேசினார். அப்போது சில தேவையற்ற கருத்துக்களையும் கூறினார். சச்சின், டிராவிட் ஆகியோரின் நிழலில் சேவாக் இருந்ததாகவும், அவர் வேறு நாட்டுக்கு ஆடி இருந்தால் எளிதாக 10,000 ரன்களை கடந்திருப்பார் என்றும் கூறினார்.
சேவாக் ஆதிக்கம்
"சேவாக் ஆதிக்கம் செலுத்தினார். நாம் துவக்க வீரர்களாக துவக்கத்தில் நிதான ஆட்டம் ஆடி, பிட்ச் எப்படி இருக்கிறது, யார் பந்துவீச்சாளர், மெக்கிராத், பிரெட் லீ, வாசிம் அக்ரம் அல்லது சோயப் அக்தர் போன்றவர்கள் வீசுகிறார்களா? என்றெல்லாம் பார்ப்போம்" என்றார் லத்தீப்.
சேவாக் ரெக்கார்டு
"ஆனால், சேவாக் யாருக்கும் அஞ்சவில்லை. அவர் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரைப் போன்ற வீரர்கள கிரிக்கெட் உலகில் பெரிதாக வெல்வார்கள். அவரது ரெக்கார்டு அவருக்காக பேசும். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000க்கும் மேல் ரன் குவித்தார்." என்றார்.
நிழலில் இருந்தார்
"அவர் எப்போதும் மற்ற வீரர்களின் நிழலிலேயே இருந்தார். அவர் சச்சின், டிராவிட் ஆகியோரோடு ஆடினார். அவர்கள் நிழலிலேயே இருந்தார்." என சேவாக் ஆடிய காலத்தில் இந்திய அணியில் மற்ற பேட்ஸ்மேன்களும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்ததை குறிப்பிட்டார்.
வேறு அணிக்கு ஆடி இருந்தால்..
"அவர் வேறு அணிக்கு ஆடி இருந்தால் மிக எளிதாக 10,000 ரன்களை கடந்து இருப்பார். வெறும் 1,500 ரன்கள் மட்டுமே மீதம் இருந்தது. அவர் அணியில் பெரிய, பெரிய வீரர்கள் எல்லாம் இருந்தார்கள், ஆனாலும், எதிரணி சேவாக்கின் தாக்கத்தை உணர்ந்தது" என சேவாக்கின் டெஸ்ட் ரெக்கார்டு பற்றி குறிப்பிட்டார் ரஷித் லத்தீப்.
தேவையற்ற சர்ச்சை
சேவாக் பெருமைகளை பேச வந்த ரஷித் லத்தீப் தேவையின்றி ஏன் அவர் வேறு அணிக்கு ஆடி இருந்தால் என்ன நடந்திருக்கும் என ஊக அடிப்படையில் பேசினார் என தெரியவில்லை. அது தான் இப்போது சர்ச்சையாக மாறி உள்ளது.