விளையாடாவிட்டால் சம்பளம் இல்லை
இந்த நிலையில் போட்டிகள் நடைபெறாமல் போனால் வீரர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்று கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் மல்ஹோத்ரா கூறியுள்ளார். தற்போதைய விதிப்படி போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பு சம்பளத்தில் 15 சதவீத தொகை வீரர்களுக்கு அளிக்கப்படும். போட்டி காலத்தில் 65 சதவீத தொகை தரப்படும். மீதமுள்ள 20 சதவீத தொகை போட்டி முடிந்ததும் கொடுக்கப்படும்.
ரூல்ஸ் தெளிவா இருக்கு
இதை வைத்துத்தான் இப்படிக் கூறியுள்ளார் மல்ஹோத்ரா. அவர் கூறுகையில், பிசிசிஐ விதிமுறைகள் தெளிவாக உள்ளன. போட்டிகள் நடைபெறாவிட்டால் வீரர்களுக்கு சம்பளமும் கிடைக்காது. மேலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாவிட்டால் பிசிசிஐக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இப்படி நிலைமை ஏற்படும் பட்சத்தில் உள்ளூர் வீரர்களுக்கும் கூட சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பேரிழப்பு ஏற்படும்
தற்போதைய சூழல் தொடர்ந்தால் கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கத்தான் தற்போது கிரிக்கெட் வாரியம் போட்டியை எப்படியாவது நடத்தி விட முடியாதா என்று தீவிர பரிசீலனையில் உள்ளது. ஏப்ரல் 15ம் தேதிக்கு தற்போது ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போடப்பட்டுள்ளன. ஆனால் அப்போதும் கூட தொடங்குமா என்பது சந்தேகம்தான்.
மேலும் தள்ளிப் போகுமா
கொரோனாவைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவில் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. உலகம் முழுவதும் 37,000 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். இந்தியாவிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. எனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதி தொடரை தொடங்குவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இதனால் போட்டித் தொடரை ஆகஸ்ட் - செப்டம்பரில் நடத்தலாமா என்ற யோசனையில் பிசிசிஐ உள்ளதாம்.