வீணடிக்க மாட்டார்கள்
பிசிசிஐ குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரி அஜித் சிங் மேட்ச் பிக்ஸிங் செய்ய வரும் புக்கீஸ், பெரிய நட்சத்திர வீரர்களை தொடர்பு கொள்ள முயன்று தங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என கூறி உள்ளார்.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டால்..
மேலும், நட்சத்திர வீரர்களான தோனி, விராட் கோலி போன்றவர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டால் நிறைய விஷயங்களை இழக்க நேரிடும் எனவும் கூறி இருக்கிறார். இப்படி விராட் கோலி, தோனி மேட்ச் பிக்ஸிங் செய்தால் என்ன ஆகும் என்றெல்லாம் ஒரு பிசிசிஐ அதிகாரி பேச என்ன காரணம்?
பிக்ஸிங் புதிய விஷயமல்ல
இந்திய கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் என்பது புதிய விஷயமல்ல. 2000மாவது ஆண்டுக்கு முன்பே இந்திய கிரிக்கெட்டில் முகமது அசாருதீன், அஜய் ஜடேஜா ஆகியோர் மீது மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்து அவர்கள் தடை செய்யப்பட்டனர்.
ஐபிஎல் சர்ச்சை
தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அஜித் சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தடை செய்யப்பட்டன.
டிஎன்பிஎல் புகார்
இதைத் தொடர்ந்து, மாநில அளவில் ஐபிஎல் போல நடந்து வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரிலும் பெட்டிங், மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட விஷயங்கள் பெரிய அளவில் நடந்து இருப்பதாக புகார் எழுந்து பிசிசிஐ அதிகாரி அஜித் சிங் அதை விசாரித்து வருகிறார்.
புக்கீஸ் செயல்பாடு
அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது மேட்ச் பிக்ஸிங் செய்யும் புக்கீஸ் யாரை வளைக்க முயல்கிறார்கள் என்பது பற்றி கூறினார். நட்சத்திர வீரர்களை தொடர்பு கொள்ள முயன்று தங்கள் நேரத்தை அவர்கள் வீணடிக்க மாட்டார்கள்.
யாருக்கு குறி?
மாறாக, இளம் வீரர்கள், சரியாக விளையாடாத வீரர்களை தான் குறி வைப்பார்கள். அவர்கள் தான் பணத்துக்கு ஆசைப்பட்டு எளிதாக வீழ்வார்கள் என குறிப்பிட்டார் விசாரணை அதிகாரி அஜித் சிங்.
இழப்பு தான் ஏற்படும்
இதற்கு விளக்கம் அளிக்கும் போது தான் தோனி, கோலி பெயரை இழுத்தார் அஜித் சிங். அவர் கூறுகையில், "என்னைக் கேட்டால், இன்றைய கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்கள் இதில் ஈடுபட்டால், லாபத்தை விட நிறைய இழப்பு தான் ஏற்படும்" என்றார்.
யோசித்துப் பாருங்கள்
"தோனி, கோலி போன்றவர்கள் இதில் ஈடுப்பட்டால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அந்த விஷயம் பணத்தை மட்டுமே சார்ந்து இருக்காது, மரியாதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்" என்றார் அஜித் சிங்.
பெட்டிங் நஷ்டம்
"அவர்கள் இது போன்ற விஷயங்களுக்காக தங்கள் மரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அது இதை விட மிகவும் பெரியது. அவர்களுக்கு மரியாதை, நட்சத்திர அங்கீகாரம் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம் மற்றும் இதர விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், பெட்டிங் மூலம் அவர்களுக்கு அதில் சிறிய சதவீதத்தை கூட கொடுக்காது" என்றும் கூறினார் அஜித் சிங்.