கடும் கிரிக்கெட் பகை
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே பெரும் பகை இருக்கும். இரு அணி ரசிகர்களும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தான் போட்டிகளை பார்ப்பார்கள். இரு அணி வீரர்களுக்கு இடையேயும் அந்த பரபரப்பு இருக்கும். இன்றளவிலும் அதிகமாக பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் தான்.
உலகக்கோப்பை வெற்றிகள்
இந்த இரு நாடுகள் மோதலில் இந்திய அணி உலகக்கோப்பை தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளது. இது வரை ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தியதில்லை. இந்திய அணி 7 முறை ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரிலும், 4 முறை டி20 உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது.
பாகிஸ்தான் அதிக வெற்றிகள்
அதே சமயம், இரண்டு நாடுகள் மோதிய கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. 132 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் 73 வெற்றிகளும், இந்தியா 54 வெற்றிகளும் பெற்றுள்ளன. 59 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 12 டெஸ்ட் போட்டிகளிலும், இந்தியா 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
சிறந்த கேப்டன் இம்ரான் கான்
பாகிஸ்தான் அணி அதிக வெற்றிகளை குவித்தது இம்ரான் கான் காலத்தில் தான். அப்போது பாகிஸ்தான் அணி இம்ரான் கான் தலைமையில் கிரிக்கெட் உலகில் சிறந்த அணிகளில் ஒன்றாக வலம் வந்தது. குறிப்பாக வேகப் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அடுத்து சிறந்த அணி என்ற பெயரைப் பெற்றது.
இம்ரான் கான் சர்ச்சை பேச்சு
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் காலத்தில் இருந்த கிரிக்கெட் பற்றி பேசிய அவர் இந்திய அணி பற்றி ஏளனமாக பேசினார். இந்திய அணியை பாகிஸ்தான் அடிக்கடி வீழ்த்தும் என்பதை குறிப்பிட்டார்.
இந்திய அணிக்காக பரிதாபப்படுவேன்
"நான் இந்திய அணிக்காக பரிதாபப்படுவேன். ஏனெனில், நாங்கள் அடிக்கடி இந்திய அணியை வீழ்த்துவோம். அவர்கள் அப்போது மிக அதிக அழுத்தத்தில் இருந்தார்கள்" என அப்போதைய இந்திய அணி பற்றிய தன் எண்ணத்தை கூறினார் இம்ரான் கான்.
இந்திய கேப்டன்கள் பயப்படுவார்கள்
அடுத்து அப்போதைய இந்திய கேப்டன்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார் இம்ரான் கான். "நான் அவர்கள் கேப்டனுடன் டாஸ் போட செல்லும் போது, அவரின் முகத்தை பார்ப்பேன். அவர் மிகவும் பயந்து போய் இருப்பார்." என்றார்.
இந்தியா எதிரி அல்ல
மேலும், "அப்போது எங்கள் எதிரி இந்தியா அல்ல. வெஸ்ட் இண்டீஸ் தான் எங்கள் எதிரி. அது சிறந்த அணி. அவர்களை விட சிறந்த அணியை நான் பார்த்ததாக நினைவில் இல்லை" எனக் குறிப்பிட்டு பாகிஸ்தான் அணி பற்றிய பெருமையை குறிப்பிட்டார்.
கடும் சர்ச்சை
முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் என்ற அந்தஸ்தை தாண்டி, பாகிஸ்தான் பிரதமர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நிலையில் இம்ரான் கான் இந்திய அணியை ஏளனமாக பேசி இருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. சமீபத்தில் முன்னாள் இந்திய கேப்டன் இன்சமாம் உல் ஹக் இந்திய வீரர்கள் சுயநலமாக ஆடினார்கள் என கூறியதும் சர்ச்சை ஆனது.
இந்த நேரத்தில் இது தேவையா?
அதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் நாட்டை பார்க்காமல், பழைய கிரிக்கெட் கதைகளை ஏன் பேசிக் கொண்டு இருக்கிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விமர்சனம் குறித்து சம்பந்தப்பட்ட இந்திய கேப்டன்கள் பதில் அளித்தால் இது மேலும் சர்ச்சையாக மாறக் கூடும்.