இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணத்திற்கு அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்.
இந்த மாத இறுதியில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியைப் பெற இம்ரான் கானை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஈசான் மணி நேரில் சந்தித்து அவரிடம் விளக்கினார்.
அவர் கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொண்ட இம்ரான் கான், நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்ல வேண்டும். கிரிக்கெட் விளையாட வேண்டும். மக்கள் கிரிக்கெட் பார்க்க ஆர்வமாக உள்ளனர். கொரோனா பரவல் இருந்தாலும் கூட பாதுகாப்பான முறையில் விளையாடலாம் என்று கூறினார்.
அதேசமயம், வீரர்கள், அணி ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை முறையாக உறுதி செய்ய வேண்டும். அனைவரின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதையும் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஆலோசித்துள்ளது.
தோனியாகவே வாழ்ந்த சுஷாந்த் சிங்.. மெய் சிலிர்த்துப் போன சச்சின்.. மறக்க முடியாத நினைவுகள்
பாகிஸ்தான் அணி இந்த மாத இறுதியில் இங்கிலாந்து செல்கிறது. அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. மொத்தம் 29 வீரர்கள், 14 ஊழியர்கள் அடங்கிய அணி இங்கிலாந்து சென்றதும் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதற்கு அடுத்த 3 முதல் 4 வாரங்கள் வரை அந்த ஊர் சூழலுக்குப் பழக்கப்படுவார்கள். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் போட்டிகள் நடைபெறும்.
சமூக விலகலை கடைப்பிடித்து பயிற்சிகளிலும் ஈடுபடுவர். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளார்களா என்றும் பரிசோதிக்கப்படுவர்.