ரசிகர்களை கவர்ந்த சச்சின்
சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், 15,921 ரன்களும் 51 சதங்களையும் எட்டியுள்ளார். 200 டெஸ்ட் மேட்ச்களையும் விளையாடியுள்ளார்.
30 ஆண்டுகள் கொண்டாட்டம்
கடந்த 1989 நவம்பர் 15ம் தேதி முதன் முதலாக தன்னுடைய கிரிக்கெட் கேரியரை துவங்கிய சச்சின் டெண்டுல்கர், இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், இந்த 30 ஆண்டுகளில் கிரிக்கெட் அடைந்துள்ள வளர்ச்சி குறித்து தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தள்ளார்.
தரத்தை மேம்படுத்த வேண்டும்
இந்த 30 ஆண்டுகளில் கிரிக்கெட்டின் வளர்ச்சி சிறந்த அளவில் உள்ளதாக தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஆனால், டெஸ்ட் போட்டிகளில் உலக தர பௌலர்களின் பற்றாக்குறை நிலவுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
சுனில் கவாஸ்கர் - ஆன்டி ராபர்ட்ஸ், டென்னிஸ் லில்லி - இம்ரான் கான் மற்றும் சச்சின் - க்ளென் மெக்கிராத் அல்லது வசிம் அக்ரம் போன்ற ஜோடிகளின் ஆட்டங்களை 70 மற்றும் 80களில் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தற்போது இதுபோன்ற இணைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சச்சின் வருத்தம்
உலக தரத்தினாலான பௌலர்கள் பற்றாக்குறையே ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்திய இத்தகைய ஜோடிகள் மீண்டும் ஏற்படாததற்கு காரணம் என்றும் சச்சின் வருத்தம் தெரிவித்துள்ளார். வேக பந்துவீச்சின் தரம் கண்டிப்பாக மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தரம் உயர்த்தப்பட வேண்டும்
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மட்டுமே தற்போது போட்டி நிலவுவதாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமநிலையை மீண்டும் பெறமுடியும்
போட்டிகளுக்கு அளிக்கப்படும் பிட்சுகளும் சிறந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் அதைக்கொண்டு சிறப்பாக செயல்பட முடியும். இதன்மூலம் பேட்டிங் மற்றும் பௌலிங்கின் சமநிலையை மீண்டும் பாதுகாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சச்சின் மகிழ்ச்சி
இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் சீரிசில் வீரர்களுக்கு சிறந்த மற்றும் நவீன டெஸ்ட் பிட்சுகள் அளிக்கப்பட்டதாக தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், இதேபோல சிறந்த பிட்சுகள் அளிக்கப்பட்டால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான போட்டிகளை அளிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.