வெற்றி இலக்கு
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில், இந்திய அணியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு பந்துவீச்சாளர்கள் தலையில் விழுந்தது.
பந்துவீச்சு எப்படி?
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஐந்து பேரும் சிறப்பாக பந்து வீசினர். ஒரு இடத்தில் கூட இந்திய அணி அதிக ரன்களை விட்டுக் கொடுக்கவில்லை. ஹர்திக் பண்டியா மட்டுமே ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் கொடுத்தார்.
எத்தனை விக்கெட்கள்?
ஷமி, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் ஓவருக்கு 4 அல்லது அதற்கும் கீழே தான் ரன்கள் கொடுத்தனர். ஷமி 4 விக்கெட்கள், பும்ரா, சாஹல், பண்டியா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
யாருக்கு விருது?
ஆட்டநாயகன் விருது 2 விக்கெட்கள் வீழ்த்திய பும்ராவிற்கு வழங்கப்பட்டது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஷமி 4 விக்கெட்கள் வீழ்த்தியதோடு, கடைசி ஓவரில் ஆப்கன் அணியை வெற்றி பெறச் செய்யாமல் தடுத்துள்ளார். அதே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்தார். ஆனால், வரை விட்டுவிட்டு பும்ராவிற்கு ஏன் விருது கொடுத்தார்கள்?
வித்தியாசம் இல்லை
பும்ரா 10 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ஷமி 9.5 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ரன்கள் கொடுத்ததில் பெரிய வித்தியாசம் இல்லை.
பும்ரா என்ன செய்தார்?
பும்ரா அப்படி என்ன தான் செய்தார்? பும்ரா எடுத்த 2 விக்கெட்களும் ஒரே ஓவரில் கிடைத்தவை. மிடில் ஆர்டர் வீரர்கள் இருவரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தினார். மேலும், கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 49வது ஓவரை வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
ஷமி எப்படி?
ஷமி கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்ற நிலையில் தான் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் தான் ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்தார் ஷமி.