மோசமான தோல்வி
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி அந்த மோசமான தோல்வியில் இருந்து மீளாது என பலரும் கருதினர். ஆனால், அடுத்து நடந்த மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.
தலைவலி
அதுவரை நல்ல பிள்ளையாக நடந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதன் பின் கட்டுப்பாடுகளை விதித்து இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியது. சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு கடும் குவாரன்டைன் விதிகளை அமல்படுத்தியது.
இந்தியா எதிர்ப்பு
இந்திய வீரர்களை அறையை விட்டு வெளியே வரவும் அனுமதிக்கவில்லை. அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த போது இந்திய வீரர்கள் கட்டுப்பாடுகளை மதிக்காமல் நடந்து கொள்வது போல ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிடத் துவங்கின.
மிருகங்கள் போல..
அதை குறிப்பிட்ட அஸ்வின், இந்திய வீரர்கள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட மிருகங்கள் போல நடத்தப்பட்டதாக கூறி உள்ளார். மேலும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவத்தையும் கூறினார். இந்த சுற்றுப்பயணம் துவங்கியது முதல் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளை சேர்ந்த வீரர்கள் ஒரே பாதுகாப்பு வளையத்தில் தான் இருந்தனர்.
லிஃப்டில் அனுமதிக்கவில்லை
ஆனால், சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்பிருந்து இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற லிஃப்டில் அனுமதிக்கவில்லை. அதற்கு முன்பு அப்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை. மெல்போர்ன் வெற்றிக்கு பின் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.