இந்தியா தடுமாற்றம்
இந்தியா பேட்டிங்கில் தட்டுத் தடுமாறி 255 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் கொஞ்சமாவது ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்திய பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.
டாஸ் வென்ற ஆஸி.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கு முக்கிய காரணம், இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு பனிப் பொழிவு காரணமாக ஏற்படும் ஈரப்பதம் பிரச்சனையாக அமையும் என்பதே.
சவாலுடன் ஆடிய இந்தியா
அந்த வகையில் சவாலுடன் இந்திய அணி பேட்டிங் ஆடத் துவங்கியது. இந்திய அணி இந்த முறை பேட்டிங் வரிசையை மாற்றி அமைத்தது. ரோஹித், தவான், ராகுல் என மூன்று துவக்க வீரர்கள் முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்தனர்.
தவான், ராகுல் அசத்தல்
ரோஹித் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தவான் 74, ராகுல் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவர் மட்டுமே இந்திய அணியின் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினார்கள்.
இந்தியா ஸ்கோர்
அடுத்து கோலி 16, ஸ்ரேயாஸ் ஐயர் 4, ரிஷப் பண்ட் 28, ஜடேஜா 25 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த தாக்குர் 13, ஷமி 10, குல்தீப் யாதவ் 17 ரன்கள் சேர்த்து இந்திய அணியை 255 ரன்கள் எட்ட வைத்தனர். இந்தியா 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிரடி துவக்கம்
256 ரன்கள் என்ற சற்றே இலக்குடன் பேட்டிங் செய்ய வந்தது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் துவக்கம் முதல் அதிரடி ஆட்டம் ஆடினர். முதல் 10 ஓவர்களில் 84 ரன்கள் குவித்து மிரட்டியது அந்த ஜோடி.
சோர்ந்து போன இந்திய அணி
அப்போதே இந்திய வீரர்கள் சோர்ந்து போனார்கள். அதன் பின் சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் கொஞ்சம் நிதானம் காட்டிய அந்த ஜோடி, வேகப் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கியது.
புரட்டி எடுத்தத ஜோடி
சிறந்த பந்துவீச்சாளர் என புகழப்படும் பும்ரா, ஷமி மற்றும் அனுபவம் குறைந்த ஷர்துல் தாக்குர் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களையும் புரட்டி எடுத்தது வார்னர் - பின்ச் ஜோடி.
பெரும் அவமானம்
37.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் போனது பெரும் அவமானமாக மாறியது.
தொடரில் பின்தங்கியது
இந்த படுதோல்வி மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 0 - 1 என பின்தங்கி உள்ளது. அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெறாவிட்டால் இந்தியா தொடரையும் இழக்க நேரிடும்.