ஆஸி. வெற்றி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய இலக்கை சேஸிங் செய்து வென்று மிரட்டியது.
தொடரை வென்ற இந்தியா
எனினும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி அசத்தலாக வென்று ஒருநாள் தொடரை வென்றது. அதிலும், மூன்றாவது போட்டியில் 287 ரன்கள் என்ற கடின இலக்கை எளிதாக எட்டியது இந்திய அணி.
தவான் காயம்
துவக்க வீரர் தவான் காயத்தால் ஆட முடியாத நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் விக்கெட் வீழ்ச்சி அடையாமல் நீண்ட நேரம் நின்று வெற்றிக்கு வழி வகுத்தனர்.
ஆரோன் பின்ச் பேட்டி
தொடரை இழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டி அளித்தார். தன் பேச்சின் போது ஆஸ்திரேலிய அணி ஏன் தோல்வி அடைந்தது என்பது பற்றியும், இந்திய அணி எப்படி ஆடியது என்பது பற்றியும் குறிப்பிட்டு, ரோஹித் சர்மா, கோலி பற்றி புகழ்ந்து பேசினார்.
கோலி, ரோஹித் சிறந்த வீரர்கள்
"அவர்களிடம் விராட் உள்ளார். அவர் எந்த காலத்திலும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக வரக் கூடியவர். மேலும், ரோஹித் இருக்கிறார். அவர் எந்த காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் முதல் ஐந்து இடங்களில் இடம் பெறுவார்" என்று கூறினார் பின்ச்.
அனுபவ வீரர்கள்
மேலும், "அவர்கள் அற்புதமாக ஆடுகிறார்கள். இந்திய அணியின் தற்போதைய நிலையில் முக்கியமானது அவர்களின் அனுபவ வீரர்கள். அவர்கள் பெரிய போட்டியில் வேலையை சரியாக செய்து முடிக்கிறார்கள்" என்று புகழாரம் சூட்டினார் ஆரோன் பின்ச்.
டாப் ஆர்டர் பற்றி என்ன சொன்னார்?
"ஷிகர் தவான் இல்லாத நிலையில், ரோஹித்தின் 100 ரன்கள் மற்றும் அவர்கள் தங்கள் பேட்டிங் வரிசையை மாற்றிக் கொள்வதுடன், அவர்களின் இரண்டு முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரும்பாலான ரன்களை குவிப்பது அவர்களின் வசதியான, தரமான டாப் ஆர்டரைக் குறிக்கிறது" என்றார் ஆஸ்திரேலியா கேப்டன்.
விக்கெட் கீப்பிங்
மேலும், கேஎல் ராகுலின் விக்கெட் கீப்பிங்கால் தங்கள் அணிக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி கூறினார் பின்ச். குறிப்பாக, இரண்டாவது போட்டியில் அவர் பின்ச்சை ஸ்டம்பிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சு அபாரம்
இந்திய அணியின் கடைசி சில ஓவர்கள் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறினார் அவர். முகமது ஷமி தன் யார்க்கரை சரமாரியாக வீசியதாக கூறினார். சைனி, பும்ரா இருவரும் கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக வீசினர் என்றார் பின்ச்.