அறிமுகம்
தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வலைப் பயிற்சியில் பந்துவீசும் ஒரு பந்துவீச்சாளராக மட்டுமே முதலில் இடம் பிடித்தார். அதன் பின் மற்ற வீரர்களின் காயத்தால் டி20 அணி, ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் வரிசையாக அறிமுகம் ஆனார்.
அசத்தல் செயல்பாடு
அவர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்தினார். அணியின் வெற்றிக்கு உதவினார். இந்திய அணியில் அனுபவ பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் அந்த குறையை போக்கும் வகையில் அவர் ஆடியது பலரது பாராட்டைப் பெற்றது.
தேரில் பவனி
இந்த நிலையில் அவர் இந்தியா திரும்பிய உடன் அவரது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டு வந்து அவரை குதிரை பூட்டிய தேரில் பவனி வரச் செய்து கண்டு களித்தனர்.
விமர்சனம்
அப்போது மக்கள் பலரும் முகக் கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. நடராஜன் மட்டுமே முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து இருந்தார். இது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கண்ணை உறுத்தி உள்ளது. இந்த வரவேற்பு சிறப்பாக இருந்தாலும், மக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவில்லை என விமர்சனம் செய்துள்ளன ஆஸ்திரேலிய ஊடகங்கள்.