ஒருநாள் தொடர்
முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் இருந்ததால், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி, இந்த தொடரின் இறுதிப் போட்டியாக அமைந்தது.
ரோஹித், தவான் நிலை
இந்தப் போட்டியில் வெல்ல இரு அணிகளும் தீவிரமாக திட்டமிட்டன. இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா இருவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முடிவில் காயத்தில் இருந்தனர்.
காயத்துடன் ஆடினர்
அவர்கள் இருவரும் காயம் முழுமையாக குணமடையாத நிலையில் அணியில் பங்கேற்றனர். மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
தவான் காயம்
இந்திய அணியின் பந்துவீச்சின் போறது, தவான் பீல்டிங் செய்த போது கடுமையாக காயமடைந்தார். பின் அவர் "எக்ஸ் ரே" எடுக்க வேண்டி மருத்துவமனைக்கு விரைந்தார். பின் அவர் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆஸி. பேட்டிங்
ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 286 ரன்கள் குவித்தது. இந்த சவாலான இலக்கை சேஸிங் செய்ய வந்த இந்திய அணிக்கு, தவான் பேட்டிங் செய்ய முடியாமல் போனது பின்னடைவாக அமைந்தது.
ரோஹித் - கோலி அபாரம்
ராகுல், ரோஹித் சர்மா துவக்கம் அளித்தனர். ராகுல் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் - கோலி இணைந்து அபாரமாக கூட்டணி அமைத்து 137 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சதம் கடந்து 119 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயாஸ் - கோலி கூட்டணி
அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் - கோலி இணைந்து அடுத்த கூட்டணி அமைத்து அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர். கோலி 89, ஸ்ரேயாஸ் ஐயர் 44* ரன்கள் குவித்தனர். இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
வேறு வகையில் ஆடினோம்
வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் விராட் கோலி, தவான் இல்லாத நிலையில், ரோஹித்துடன் எப்படி திட்டமிட்டு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினோம் என்பது பற்றி கூறினார். முந்தைய போட்டிகளைக் காட்டிலும் இந்த முறை வேறு வகையில் ஆடியதாக குறிப்பிட்டார் அவர்.
திட்டமிட்ட கூட்டணி
கோலி கூறுகையில், "ஆஸ்திரேலியா நிச்சயம் எங்கள் இருவரில் (ரோஹித், கோலி) ஒருவரை, தவான் இல்லாத நிலையில், விரைவாக வீழ்த்த திட்டமிடும் என்பது எங்களுக்கு தெரியும். ரோஹித் உடனான இந்த கூட்டணி, மிகவும் திட்டமிட்ட கூட்டணி ஆகும். நாங்கள் இருவரும் பல அலங்காரமான கூட்டணி அமைத்து ஆடி இருக்கிறோம்" என்றார்.
கோலி சொன்ன திட்டம்
மேலும், "நான் ரோஹித்திற்கு ஒத்துழைத்து ஆடினேன். காரணம், அவர் சிறப்பாக ஆடி வந்தார். இடையே ரோஹித் ஆட்டமிழந்த பின் நான் என் கையில் போட்டியை எடுத்துக் கொண்டேன். பின் ஸ்ரேயாஸ் ஐயருடன் அந்த கூட்டணியை அமைத்தேன்." என்று தன் திட்டம் பற்றி கூறினார் கோலி.