மூன்று வருட போராட்டம்
நடராஜன் ஐபிஎல் தொடரில் மட்டுமே சுமார் மூன்று ஆண்டுகள் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். 2017இல் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 கோடி கொடுத்து அவரை வாங்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த சீசனில் காயம் காரணமாக அவரால் சரியாக செயல்பட முடியவில்லை.
வார்னர் நம்பிக்கை
2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடர்களில் ஹைதராபாத் அணியில் வாய்ப்பு இன்றி அமர்ந்து இருந்தார் நடராஜன். 2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், நடராஜன் மீது நம்பிக்கை வைத்து அவரை அணியில் தேர்வு செய்து தொடர்ந்து வாய்ப்பு அளித்தார்.
வலைப் பயிற்சி பந்துவீச்சாளர்
2020 ஐபிஎல் தொடரில் அவரது மிரட்டல் யார்க்கர் பந்துவீச்சை கண்ட இந்திய அணி தேர்வுக் குழு அவரை வலைப் பயிற்சியில் பந்துவீச கூடுதல் வீரராக மட்டுமே தேர்வு செய்தது. அதுவே அவருக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது.
அணியில் இடம்
ஆனால், இடையே வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகிய நிலையில், டி20 அணியில் அவரது இடத்தை பெற்றார் நடராஜன். டி20 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? இல்லை அங்கேயும் மாற்று வீரராக மட்டுமே அவர் வெளியே அமர வைக்கப்படுவாரா? என்ற கேள்வி இருந்தது.
ஒருநாள் அணி
திடீரென ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார் நடராஜன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் வாய்ப்பு பெற்றார். அந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அசத்தல் செயல்பாடு
மூன்று போட்டிகளிலும் அவர் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். டி20 தொடரில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். நிறைய யார்க்கர் பந்துகளை வீசி மிரட்டினார். சர்வதேச அரங்கில் நல்ல அறிமுகம் பெற்று இந்தியா மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவிலும் புகழ் பெற்றார்.
பாராட்ட வேண்டும்
இந்த நிலையில், தேர்வுக் குழுவை எத்தனையோ விஷயத்துக்கு நாம் திட்டி உள்ளோம். ஆனால், அவர்கள் நல்ல விஷயம் செய்யும் போது நாம் பாராட்ட வேண்டும். நடராஜன் நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அவரை சரியான நேரத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என பாராட்டி உள்ளார் இர்பான் பதான்.
விமர்சனம்
பதானின் அந்த ட்வீட் வைரல் ஆகி வருகிறது. தேர்வுக் குழு முதலிலேயே அவரை அணியில் தேர்வு செய்யவில்லை என்பதை சுட்டிக் காட்டி சிலர் இப்போதும் தேர்வுக் குழுவை விமர்சனம் செய்துள்ளனர். எப்படியோ தேர்வுக் குழு ஏதோ வகையில் நடராஜனை தேர்வு செய்து இந்த முறையும் அணித் தேர்வுக்காக திட்டு வாங்காமல் தப்பி உள்ளது.