கைது செய்யப்படும் கும்பல்கள்
பொதுவாக கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடப்பது வாடிக்கையான ஒன்று தான். ஒவ்வொரு கிரிக்கெட் தொடரின் போதும் இந்தியாவின் பல நகரங்களில் ஒரீரு சூதாட்ட கும்பல்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
மூன்றாவது ஒருநாள் போட்டி
ஞாயிறு அன்று நடந்து முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் கடைசி போட்டியை வைத்தும் டெல்லியில் பெரிய அளவில் சூதாட்டம் நடந்துள்ளது.
மொபைல் போன், லேப்டாப்
இதை அறிந்த டெல்லி குற்றப் பிரிவு காவல்துறையினர் போட்டி நடந்த போது அவர்களை சுற்றி வளைத்தனர். சூதாட்டம் நடந்த இடத்தில் இருந்த 70 மொபைல் போன்கள், ஏழு லேப்டாப்கள், இரண்டு டிவி மற்றும் சூதாட்ட கணக்கை குறித்து வைக்க பயன்படுத்தப்பட்ட குறிப்பேடு என அனைத்தையும் கைப்பற்றினர்.
எந்தப் போட்டி?
பல்வேறு போட்டிகளை வைத்து அவர்கள் சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தாலும், அன்றைய தினம் பெரும்பாலும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியை வைத்தே சூதாடி உள்ளனர்.
2 கோடிக்கு சூதாட்டம்
அந்த போட்டிக்கு மட்டும் சுமார் 2 கோடி அளவுக்கு சூதாட்ட பந்தயம் நடத்தப்பட்டு இருப்பதை காவல்துறை கண்டறிந்துள்ளது. அந்த இடத்தில் இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தியா வெற்றி
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் ஒருநாள் தொடரை 2 - 1 என கைப்பற்றியது இந்திய அணி.
குதிரைப் பந்தயம்
இந்தியாவில் குதிரைப் பந்தயத்திற்கு மட்டுமே சட்டப்படி சூதாட அனுமதி உண்டு. மற்ற விளையாட்டுக்களை வைத்து நேரடியாக சூதாட்டம் நடத்த அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.