தனி வியூகம்
இறுதிப் போட்டியில் ஷெபாலியை சமாளிக்க ஆஸ்திரேலியா தனி வியூகமும் வகுத்து திட்டமிட்டு களம் இறங்கியிருந்தது. இதனால் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷெபாலியோ வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதாவது அனல் கக்கிய ஷெபாலி மீது தண்ணீரை ஊற்றி அணைத்து விட்டது ஆஸ்திரேலியா.
ஏமாற்றம்
ஷெபாலியின் தோல்வி இந்திய அணிக்கு உண்மையிலேயே மிகப் பெரிய ஏமாற்றம்தான். அவர் மட்டும் அதிரடியாக ஆடி நல்லதொரு தொடக்கத்தைக் கொடுத்திருந்தால் நிச்சயம் அவருக்குப் பின்னால் வந்தவர்கள் சற்று ரன் குவிப்பில் ஈடுபடுவதற்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பே அளிக்காமல் ஷெபாலி 2வது பந்திலேயே வேகமாக அவுட் ஆனது அனைவரையும் ஆட வைத்து விட்டது.
அதிரடி ஆட்டம்
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான தொடக்கப் போட்டியில் ஷெபாலி வர்மா 29 ரன்களை எடுத்திருந்தார். அதுவும் 15 பந்துகளில். அந்தப் போட்டியில் அவர் அதிரடியாகவே ஆடியிருந்தார். அடுத்து வந்த போட்டிகளிலும் கூட ஷெபாலி சிறப்பாகவே ஆடி வந்தார். இதனால் இன்றைய இறுதிப் போட்டியில் அவர் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றி விட்டார்.
பிளேயர் ஆப் தி மேட்ச்
இந்த உலகக் கோப்பைத் தொடரில் 2 முறை பிளேயர் ஆப் தி மேட்ச் விருதும் வாங்கியிருந்தார் ஷெபாலி. ஆனால் இன்றைய போட்டியில் அவரால் இந்தியாவுக்கு கோப்பையை வாங்கித் தர முடியாமல் போய் விட்டது. இந்த நிலை ஷெபாலியை ரொம்பவே கலங்கடித்து விட்டது. மைதானத்தில் கண்கலங்கிய அவரை சக வீராங்கனைகள் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேற்றியதை காண முடிந்தது. கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் கூட ரசிகர்களின் இதயங்களை ஷெபாலி வென்று விட்டார். அந்த வகையில் ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.