என்ன நடந்தது?
இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் முதலில் பெரிய அளவில் அதிரடி ஆட்டம் ஆடவில்லை. 18 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போது கடைசி இரண்டு ஓவர்களில் ஜடேஜா அதிரடி ஆட்டம் ஆடினார்.
காயம்
அப்போது 19வது ஓவரில் அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். அவரால் பந்து வீச முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்திய அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், ஜடேஜா பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும் என்று கருதப்பட்டது.
ஹெல்மட் தாக்குதல்
கடைசி ஓவரில் அவர் ஹெல்மட்டில் பந்து தாக்கியது. ஐசிசி விதிப்படி ஹெல்மட் அல்லது தலையில் பந்து தாக்கினால் அந்த வீரருக்கு மூளை அழற்சி ஏற்பட்டுள்ளதா? என அப்போதே சோதனை செய்ய வேண்டும். அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியுமா? என சோதிக்க வேண்டும்.
யாரும் வரவில்லை
ஆனால், ஜடேஜாவுக்கு ஹெல்மட்டில் பந்து தாக்கிய போது அவரை பிசியோதெரபிஸ்ட் பரிசோதனை செய்யவில்லை. ஆனால், அடுத்த இன்னிங்க்ஸ் துவங்கும் முன் அவருக்கு தலை சுற்றுவதாகக் கூறி மூளை அழற்சியை காரணமாக காட்டி சாஹல் அணியில் சேர்க்கப்பட்டு பந்து வீசினார்.
இது சரியா?
ஜடேஜாவுக்கு உண்மையிலேயே தலையில் காயம் ஏற்பட்டதா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. அவருக்கு காலில் இருக்கும் காயத்தால் பந்து வீச முடியாது என்பதால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதை போல காட்டி மாற்று வீரரை இந்தியா ஆட வைத்ததாக பரபரப்பு எழுந்தது.
குளறுபடி
முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் பலர் இது பற்றி பேசத் துவங்கினர். மைக்கேல் வாகன் இந்தியா ஏதோ குளறுபடி செய்துள்ளதாக கூறினார். டாம் மூடி இந்திய அணி பிசியோதெரபிஸ்ட் ஏன் ஜடேஜாவை சோதனை செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
விதிப்படி நடந்தது
ஆனால், சேவாக், கம்பீர் போன்ற சிலர் மூளை அழற்சி என்பது அப்போதே தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில மணி நேரம் கழித்து கூட அதை அந்த வீரர் உணரலாம். அதனால் சாஹல் மாற்று வீரராக ஆடியது விதிப்படி தான் நடந்துள்ளது என வாதாடினர்.
நீக்கம்
இந்த நிலையில், ஜடேஜாவை மீதமுள்ள டி20 போட்டிகளில் இருந்து நீக்கி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது பிசிசிஐ. அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக பிசிசிஐ கூறி உள்ளது. ஜடேஜா உண்மையில் எந்த காயத்தால் நீக்கப்பட்டார்? என்பதே அனைவரின் சந்தேகமாகவும் உள்ளது.