இந்தியா அசத்தல்
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எந்த இடத்திலும் தவறு செய்யவில்லை. பேட்டிங்கில் ஓரிருவரை தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ரன் குவித்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் துவக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், 30 ஓவர்களுக்குப் பின் ஆதிக்கம் செலுத்தி அசத்தினர்.
டாஸ் வென்ற ஆஸி.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டி நடைபெற்ற ராஜ்கோட் மைதானம் ரன் குவிக்க வசதியான ஆடுகளம் என்பதால் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 350 ரன்கள் வரை குவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அபார துவக்கம்
இந்திய அணிக்கு ரோஹித் சர்மா சிறப்பான துவக்கம் அளித்து 42 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் நிலைத்து நின்று ஆடினார். கோலி 78, தவான் 96 ரன்கள் குவித்து அசத்தினர்.
ராகுல் அதிரடி
ஸ்ரேயாஸ் ஐயர் 7, மனிஷ் பாண்டே 2 ரன்கள் எடுத்து ஏமாற்றினாலும், ராகுல் சிறப்பாக, அதிரடியாக ஆடினார். 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்த அவர் கடைசி ஓவரில் தான் ரன் அவுட் ஆனார்.
இந்தியா ஸ்கோர்
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 341 ரன்கள் என்ற இலக்கு, ராஜ்கோட் மைதானத்தில் எட்டக் கூடிய இலக்காகவே கருதப்பட்டது.
வார்னர், பின்ச் அவுட்
அந்த அணியின் வார்னர் 15 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆரோன் பின்ச் 33 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்மித் - லாபுஷாக்னே ஜோடி அபாரமாக ஆடி ரன் சேர்த்தது.
குல்தீப் யாதவ் ஓவர்
லாபுஷாக்னே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து 38வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அலெக்ஸ் கேரி 18, ஸ்டீவ் ஸ்மித் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அது போட்டியில் இந்திய அணியின் கையை ஓங்கச் செய்தது.
2 விக்கெட்
அடுத்து ஷமி வீசிய 44வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆஷ்டன் டர்னர் 13, பாட் கம்மின்ஸ் ஆட்டமிழந்தனர். அத்துடன் ஆஸ்திரேலியாவின் வெற்றி எட்டாக் கனியாக மாறியது. ரன் ரேட் தேவை அப்போது 10க்கும் மேல் சென்றது.
இந்தியா வெற்றி
அதன் பின் 49.1 ஓவரில் 304 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 80 ரன்கள் மற்றும் ஸ்டம்பிங் ஆகியவற்றுக்காக ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
தொடர் சமன்
முதல் போட்டி தோல்விக்கு இந்தியா பழிதீர்த்தது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி கோப்பை வெல்லும் என்பதால் அந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.