இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மா இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர் ஆவார். கேப்டன் விராட் கோலியை விட அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். வேகப் பந்துவீச்சில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். பும்ரா, ஷமி சுமாராக ஆடும் சில போட்டிகளில் இஷாந்த் சர்மா கை கொடுத்து அணியை காப்பாற்றுவார்.
தொடரில் இருந்தே நீக்கம்
அவருக்கு ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை. அவரை முற்றிலுமாக இந்த தொடரில் இருந்து நீக்கியதாக பிசிசிஐ அறிவித்தது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர்
தற்போது பும்ரா, முகமது ஷமியுடன் மூன்றவதாக ஒரு வேகப் பந்துவீச்சாளரை ஆட வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி அல்லது முகமது சிராஜ் ஆகியோரில் ஒருவர் அந்த வாய்ப்பை பெறக் கூடும்.
என்ன செய்வார்?
இது பற்றி பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இஷாந்த் சர்மா இல்லாதாது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும். அவர்தான் அணியின் மூன்றாவது பந்துவீச்சாளர். பும்ரா, ஷமி முக்கிய பந்துவீச்சாளர்களாக இருந்தாலும், ஆஃப் சைடு பந்து வீசி, அதே சமயம் அழுத்தம் குறையாமல் பார்த்துக் கொள்வார். ரன்களும் குறைவாக கொடுப்பார் என்றார்.
ஆஸ்திரேலிய அணிக்கு சாதகம்?
இஷாந்த் சர்மா இல்லாத நிலையில் உமேஷ் யாதவ் அணியில் ஆட அதிக வாய்ப்பு உள்ளது. அவர் வெளிநாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற குறை உள்ளது. அதை அவர் போக்கவில்லை என்றால், ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக முடிவுகள் மாறலாம்.