முதல் போட்டி தோல்வி
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
பேட்டிங் வரிசை
இதையடுத்து இந்திய அணி அடுத்த ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. முதல் போட்டியில் அணியில் கோலி நான்காம் வரிசையில் பேட்டிங் செய்தது பின்னடைவாக அமைந்த நிலையில் அதை இரண்டாவது போட்டியில் மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இரண்டு மாற்றங்கள்
இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. காயமடைந்த ரிஷப் பண்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு, மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டார்.
மனிஷ் பாண்டே நிலை
மனிஷ் பாண்டே டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அவ்வப்போது ஆடி வந்தாலும், அவர் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று பல மாதங்கள் ஆகிறது. கடைசியாக அவர் 2018 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று இருந்தார்.
விக்கெட் கீப்பிங் யார்?
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், அவருக்கு பதில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய உள்ளார். முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சின் போது ரிஷப் பண்ட் காயத்தால் ஆடாத நிலையில், ராகுல் தான் அப்போதும் கீப்பிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்று விக்கெட் கீப்பர்
உத்தேச இந்திய அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதில் கேஎஸ் பரத் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் போட்டியில் ஆடவிட்டாலும், ராகுல் வெளியேற வேண்டிய நிலை வந்தால், அவர் மாற்று வீரராக கீப்பிங் செய்வார்.
நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு
இரண்டாவது போட்டியில் பந்துவீச்சிலும் மாற்றம் செய்துள்ளார் கேப்டன் கோலி. முதல் போட்டியில் ரன்களை வாரி இறைத்த ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு, நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற ஆஸி
ஆஸ்திரேலிய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியிலும் அந்த அணி டாஸ் வென்று இதே முடிவை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விவரம்
இந்திய அணி விவரம் - ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனி