விமர்சனம்
குல்தீப் யாதவ் கடந்த ஐபிஎல் தொடர் முதல் தன் இயல்பான பந்துவீச்சை, விக்கெட் வீழ்த்தும் திறனை இழந்துவிட்டதாக விமர்சனம் உள்ளது. அவர் உலகக்கோப்பை முதல் எந்தப் போட்டியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பாராட்டைப் பெற்ற குல்தீப்
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் ரன்களை வாரிக் கொடுத்தாலும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி, அலெக்ஸ் கேரி, ஸ்டீவ் ஸ்மித் என இரண்டு பார்ம் பேட்ஸ்மேன்களை வெளியேற்றி பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்தியா பேட்டிங்
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 42, தவான் 96, கோலி 78, ராகுல் 80 ரன்கள் குவித்தனர். அதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 340 ரன்கள் குவித்தது.
ஸ்டீவ் ஸ்மித்
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் 15, பின்ச் 33 சுமார் துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த மார்னஸ் லாபுஷாக்னே 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது களத்தில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார்.
அலெக்ஸ் - ஸ்மித் ஜோடி
அவருடன் அலெக்ஸ் கேரி இணைந்தார். இருவரும் தொடர்ந்து ரன் குவித்த நிலையில், இந்தியா அழுத்தத்தில் ஆழ்ந்தது. அப்போது குல்தீப் யாதவ் அதிக ரன்களை வாரி வழங்கி வந்தார். அவர் வீசிய 38வது ஓவரில் திருப்பம் கிடைத்தது.
அலெக்ஸ் கேரி அவுட்
அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் அலெக்ஸ் கேரி. கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா தன் 4வது விக்கெட்டை இழந்தாலும், ஸ்டீவ் ஸ்மித் அப்போது 98 ரன்களுடன் களத்தில் இருந்ததால் இந்தியா பதற்றத்துடன் தான் இருந்தது.
ஸ்டீவ் ஸ்மித் அவுட்
அதே 38வது ஓவரின் ஐந்தாவது பந்தில் குல்தீப் யாதவ் வீசிய மோசமான பந்தை அடித்து ஆட வந்தார் ஸ்டீவ் ஸ்மித். எனினும், பந்து எட்ஜ் ஆகி திசை மாறி ஸ்டம்ப்புகளை பதம் பார்த்தது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஆஸ்திரேலியா தோல்வி
அந்த இரண்டு விக்கெட்களை அடுத்து ஆஸ்திரேலியா தத்தளிக்க துவங்கியது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த அந்த அணி, 49.1 ஓவர்களில் 304 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது.
குல்தீப் யாதவ் நிலை
குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் 10 ஓவர்களில் 65 ரன்களை கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்தார். ரன்களை அதிகமாக கொடுத்தாலும், விக்கெட்கள் மூலம் அணியில் தன் இடத்தை அடுத்த தொடர் வரையாவது உறுதி செய்து கொள்வார்.