சிட்னி : சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரையும் அணியில் ஒன்றாக ஆட வைக்க வேண்டும் என கூறி உள்ளார் பிரக்யான் ஓஜா.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அஸ்வின் சுழற் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்ற ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பாக ஆடி அணியை காப்பாற்றினார்.
இந்த நிலையில், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இவர்கள் இருவரும் அணிக்கு கை கொடுப்பார்கள் என நம்பிக்கை அளித்துள்ளார் ஓஜா.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளது. இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்று இருப்பதால் அடுத்த போட்டியில் வென்று முன்னிலையை அதிகரிக்க இரு அணிகளும் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றன.
விராட் கோலி இல்லாத நிலையில் அணியை திறம்பட வழிநடத்தி இரண்டாவது போட்டியில் வெற்றி தேடிக் கொடுத்தார் ரஹானே. இந்த நிலையில், மூன்றாவது டெஸ்டில் அவர் அணியில் என்ன மாற்றம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுழற் பந்துவீச்சாளர்களான அஸ்வின் - ஜடேஜா ஜோடியை மாற்றக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளார் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா. இது பற்றி அவர் கூறுகையில், சிட்னி ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். அதனால் நிச்சயம் நாம் அஸ்வின் - ஜடேஜா ஜோடியை மாற்றக் கூடாது என்றார்.
மேலும், அவர்களில் ஒருவர் ரன் கொடுக்காமல் வீசினால், மற்றவர் விக்கெட் எடுப்பார். எனவே, அவர்கள் கூட்டணி சிறப்பான ஒன்று. இதை முன்னர் அனில் கும்ப்ளே - ஹர்பஜன் சிங் செய்து நாம் பார்த்திருக்கிறோம். எனவே, இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை என்றார் ஓஜா.