டக் அவுட்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆனார். அவர் மோசமான பார்மில் இருந்தும் அவரை அணியில் தேர்வு செய்தது ஏன்? என பலரும் கடுமையாக விமர்சனம் செய்யத் துவங்கி உள்ளனர்.
தெரிந்தே நடந்தது
கேப்டன் விராட் கோலி ஏன் மற்ற இரு துவக்க வீரர்களை விட்டு விட்டு, ப்ரித்வி ஷாவை தேர்வு செய்தார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரன் குவிக்க மாட்டார், விரைவில் விக்கெட்டை பறி கொடுப்பார் என்பது ஆஸ்திரேலிய அணிக்கும் கூட தெரிந்தே இருந்தது.
இதற்குத்தான் தேர்வு செய்தாரா?
அதே போல, ப்ரித்வி ஷாவின் பலவீனமான ஸ்விங் பந்துவீச்சை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி அவரை டக் அவுட் ஆக்கி அனுப்பியது. இதற்குத்தான் கோலி அவரை அணியில் தேர்வு செய்தாரா? ஏன் கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில்லை துவக்க வீரராக ஆட வைக்கவில்லை?
கில், ராகுல்
பயிற்சிப் போட்டியில் ஷுப்மன் கில் ஒரு அரைசதம் அடித்து நல்ல பார்மில் இருந்தார். கடந்த டெஸ்ட் தொடர்களில் கேஎல் ராகுல் சரியாக ஆடவில்லை என்றாலும், சமீபத்தில் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரன் மெஷினாக ரன் குவித்து வருகிறார்.
சொற்ப ரன்கள்
அவர்கள் இருவரில் ஒருவருக்கு நிச்சயம் துவக்க வீரராக வாய்ப்பு அளித்து இருக்கலாம். ஆனால், சுத்தமாக பார்மில் இல்லாத ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஐபிஎல் தொடர் மற்றும் பயிற்சிப் போட்டிகளில் கூட அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். பல முறை டக் அவுட் ஆகி இருந்தார்.
டெக்னிக்கில் தவறு
அவர் பார்ம் அவுட் என்பதை விட அவரது பேட்டிங் டெக்னிக்கில் தவறு உள்ளது. இதை அவரது ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் முதல் முன்னாள் வீரர்கள் பலரும் கூறி உள்ளனர்.
அழுத்தம்
இப்படி அனைவருக்கும் அவரது பலவீனம் தெரிந்த நிலையில் அவரை ஏன் அணியில் தேர்வு செய்ய வேண்டும்? கேப்டன் விராட் கோலி வெளியில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக ப்ரித்வி ஷாவை தொடர்ந்து அணியில் தேர்வு செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.