டெஸ்ட் தொடர் வெற்றி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை புரிந்தது.
ரஹானே அசத்தல்
விராட் கோலி உட்பட பல முன்னணி இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு அணியை சிறப்பாக வழிநடத்தி கேப்டனாக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் அஜின்க்யா ரஹானே.
வரவேற்பு
இந்த வெற்றியை இந்திய மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா திரும்பிய அனைத்து வீரர்களுக்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அஜின்க்யா ரஹானேவுக்கு மும்பையில் அவரது இல்லத்திற்கு அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேக்
அப்போது ரஹானேவின் நண்பர் கங்காரு உருவம் வைத்து செய்யப்பட்ட கேக்கை வெட்டி ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியதை கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தார். அந்த கேக்கை கண்ட ரஹானே அதை வெட்ட மறுத்து விட்டார்.
கண்ணியம் காத்தார்
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருந்தாலும், அந்த நாட்டின் அடையாளமான கங்காரு உருவம் கொண்ட கேக்கை வெட்டினால் அது அவர்களை அவமரியாதை செய்வது போல இருக்கும் என்பதால் அவர் கண்ணியத்துடன் அதை மறுத்து விட்டார்.