எதிர்பார்ப்பு
கொரோனா வைரஸ், லாக்டவுன் ஆகியவற்றால் ஏற்பட்ட தடைக்கு பின் நீண்ட காலம் கழித்து இந்திய அணி ஆடிய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுதான். அதனால், இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடி நல்ல பயிற்சியுடன் இருப்பதாகவே அனைவரும் கருதினர்.
பாதி கூட இல்லை
ஆனால், ஐபிஎல் செயல்பாட்டில் பாதி கூட இந்த போட்டியின் போது களத்தில் காண முடியவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தார் கேப்டன் விராட் கோலி. கூடுதல் பந்துவீச்சாளர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
ஐந்து பந்துவீச்சாளர்கள்
பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாஹல் மட்டுமே அணியில் தேர்வு செய்யப்பட்டனர். ஹர்திக் பாண்டியா ஆல்-ரவுண்டர் என்றாலும் அவர் இன்னும் பந்துவீசும் அளவுக்கு முழு உடற்தகுதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
பேட்ஸ்மேன் பாண்டியா
எனவே, ஹர்திக் பாண்டியா முதன்முறையாக இந்திய அணியில் பேட்ஸ்மேன் என்ற ஒரு அடையாளத்துடன் தேர்வு செய்யப்பட்டார். சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியதால் அவர்கள் ஐந்து பேரும் தான் 50 ஓவர்களையும் வீச வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
அதே சம்பவம்
ஏற்கனவே, விராட் கோலி பல முறை சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை ஆட வைத்து அவர்கள் ரன்களை வாரி இறைக்கும் போது ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதை பார்த்து சலித்த நிலையில், அதே சம்பவம் தான் இந்தப் போட்டியிலும் நடந்தது.
வேடிக்கை பார்த்த கோலி
அதிலும் இந்த முறை ஒன்று, இரண்டு பந்துவீச்சாளர்கள் இல்லை, மூன்று பந்துவீச்சாளர்கள் வாரி இறைத்தனர். ஆனால், எதுவும் செய்ய முடியாமல் அவர்களையே மீண்டும், மீண்டும் பந்து வீச வைத்து வேடிக்கை பார்த்தார் கேப்டன் விராட் கோலி.
வாரி இறைத்த மூவர்
10 ஓவர்கள் முழுவதுமாக வீசிய பும்ரா 73 ரன்களும், சாஹல் 89 ரன்களும், நவ்தீப் சைனி 83 ரன்களும் வாரிக் கொடுத்தனர். ஆரோன் பின்ச் 114, வார்னர் 69, ஸ்டீவ் ஸ்மித் 105, மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் என குவிக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 374 ரன்கள் எடுத்தது.
தப்பித்த பேட்டிங்
இந்திய அணி 50 ஓவர்களில் 308 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய பேட்டிங்கில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் சொதப்பினாலும், 101 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தாலும், 300 ரன்களை கடந்ததால் இந்திய அணி பேட்டிங் விமர்சனத்தில் இருந்து தப்பியது.
சமநிலை இல்லை
ஆனால், பந்துவீச்சு மோசமாக அமைந்ததால் விமர்சகர்கள் கடுமையாக விளாசி வருகின்றனர். கேப்டன் விராட் கோலி கூடுதல் பந்துவீச்சாளர்களை அணியில் சேர்த்து இருந்தால் சமநிலை ஏற்பட்டு இருக்கும் என கூறி வருகின்றனர்.