ஓரளவு தேறினார் பண்ட்
ரிஷப் பண்ட் பேட்டிங், விக்கெட் கீப்பிங், டிஆர்எஸ் முடிவுகள் என பலவற்றிலும் மோசமாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பேட்டிங்கில் ஓரளவு தேறிவந்தார்.
எதிர்பார்ப்பு
இன்னும் சில தொடர்களில் அவர் நல்ல பேட்ஸ்மேன் ஆக மாறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், அவருக்கு அளவுக்கு அதிகமான வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டதால் அவரது தேர்வை ரசிகர்கள் எதிர்த்து வந்தனர்.
ஆஸ்திரேலிய தொடர்
அடுத்தகட்ட இளம் வீரரான சஞ்சு சாம்சன் அல்லது மூத்த வீரர் தோனியை அணிக்கு அழைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடினார் பண்ட்.
மூளை அழற்சி ஏற்பட்டது
அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த போது அவரது ஹெல்மட்டில் பந்து பலமாக தாக்கியது. அதனால், மூளை அழற்சி (Concussion) ஏற்பட்டு, அந்தப் போட்டியில் அவரால் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய முடியவில்லை.
விக்கெட் கீப்பிங் செய்தது யார்?
அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார். அவர் உள்ளூர் போட்டிகளில் அதிக அளவு விக்கெட் கீப்பிங் செய்ததில்லை. ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். அணியின் நிலை கருதி விக்கெட் கீப்பிங் பணியை ஓரளவு அனுபவம் கொண்ட ராகுலிடம் கொடுத்தார் கேப்டன் கோலி.
மின்னல் வேக ஸ்டம்பிங்
முதல் போட்டியில் ராகுல் சிறப்பாக செயல்பட்டார். இரண்டாவது போட்டியிலும் ரிஷப் பண்ட் ஆட முடியாத நிலையில், அந்தப் போட்டியிலும் ராகுல் சிறப்பாக கீப்பிங் செய்தார். மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து மிரள வைத்தார்.
பண்ட்டுக்கு வாய்ப்பு இல்லை
மூன்றாவது போட்டிக்கு முன் ரிஷப் பண்ட் போட்டிகளில் ஆடும் அளவுக்கு தயாராகி விட்டார். ஆனால், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்றதால், அதே அணியை களமிறக்க முடிவு செய்தார் கேப்டன் கோலி. அதனால், ராகுலை தொடர்ந்து விக்கெட் கீப்பராக களமிறக்கினார். ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
டிஆர்எஸ்
அந்தப் போட்டியில் ராகுல் பெரிய அளவில் ரன் எடுக்காவிட்டாலும், விக்கெட் கீப்பிங்கில் அசத்தலாக செயல்பட்டார். குறிப்பாக, ஒரு கடினமான டிஆர்எஸ் விக்கெட் வாய்ப்பை சரியாக கணித்து, ரிவ்யூ கேட்டு அணிக்கு ஒரு விக்கெட் பெற்றுத் தந்தார்.
கூடுதல் பேட்ஸ்மேன் ஆடலாம்
ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால் அணியில் கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவரை ஆட வைக்க முடிகிறது. ராகுலும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அதனால், அணியின் பேட்டிங் பலம் கூடுகிறது. எனினும், அவர் நிரந்தர விக்கெட் கீப்பராக மாறுவாரா? என்ற கேள்வி இருந்தது.
ராகுல் டிராவிட் உதாரணம்
இந்த நிலையில், போட்டிக்கு பின் பேசிய கேப்டன் கோலி, 2003 உலகக்கோப்பையில் ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பராக பயன்படுத்தி இந்திய அணி பேட்டிங்கை பலப்படுத்திக் கொண்டது. அதே போல, கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக சிறிது காலம் பயன்படுத்தி பார்க்கலாம் என இருக்கிறோம் என்றார்.
ரிஷப் பண்ட் நிலை என்ன?
மேலும், அணியின் சமநிலை சரியாக இருப்பதால் அதை மாற்ற விரும்பவில்லை. எனவே, மற்ற வாய்ப்புகளை பற்றி பேசி குழப்பிக் கொள்ள வேண்டாம் என்ற முடிவில் இருப்பதாக தெரிவித்தார். கோலி கூறும் மற்ற வாய்ப்பு என்பது ரிஷப் பண்ட் குறித்து தான். அவர் நியூசிலாந்து தொடரில் போட்டிகளில் ஆட மாட்டார் என்றே தெரிகிறது.