முதல் ஒருநாள் போட்டி
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்திய அணி லாக்டவுனுக்கு பின் ஆடும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் இது குறித்து அதிகம் விவாதம் செய்தனர்.
யாருக்கு இடம்?
இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. எனவே, தவானுடன் யார் துவக்க வீரராக ஆடப் போவது என்ற கேள்வியும் எழுந்தது. ஹர்திக் பாண்டியா பந்து வீச முடியாத நிலையில், அவருக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்ற விவாதமும் நடைபெற்றது.
அணித் தேர்வு
இந்த நிலையில், ஒரு ரசிகர், சஞ்சய் மஞ்ச்ரேக்கரிடம் முதல் ஒருநாள் போட்டியில் ஆட உள்ள இந்திய அணியை தேர்வு செய்யுமாறு கூறி இருந்தார். சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தன் 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்து இருந்தார்.
நையாண்டி
அவரது அணியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதில் முழு நேர சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்வை சேர்த்து இருந்தார். அத்துடன் நில்லாமல், பக்கத்தில், விராட் கோலி ஜடேஜாவை தான் தேர்வு செய்வார் என நையாண்டி செய்து இருந்தார்.
பணி நீக்கம்
மஞ்ச்ரேக்கர் தற்போது சோனி தொலைக்காட்சியில் வர்ணனையாளர் பணியை பெற்றுள்ளார். அவரது வர்ணனை மோசமாக இருப்பதாகவும் சில ரசிகர்கள் கூறி அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என சோனி தொலைக்காட்சிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ரசிகர்கள் கோபம்
அதைக் கண்ட ரசிகர்கள் சிலர் கோபம் கொண்டனர். இவரை பிசிசிஐ நீக்கிய பின்னும் அவர் திருந்தவில்லை எனக் கூறி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மஞ்ச்ரேக்கர் கூறியது போலவே போட்டியில் குல்தீப் யாதவ்வுக்குப் பதில் ஜடேஜாவை தான் கோலி தேர்வு செய்தார்.
ஜடேஜா சொதப்பல்
போட்டியில் ஜடேஜா 10 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்து இருந்தார். பேட்டிங்கில் நிதான ஆட்டம் ஆடி 25 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது.