கிரிக்கெட் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நீண்ட கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. முதலில் ஒருநாள் தொடர் துவங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து டி20 தொடரும், டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.
முக்கிய தொடர்
இதில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முக்கியமானதாக கருதப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கம் என்பதால் அதில் இந்தியா வென்று புள்ளிகளை பெற வேண்டும். எனவே, முக்கிய வீரர்கள் அனைவரும் அதில் பங்கேற்பது அவசியம்.
கோலி விடுப்பு
கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் இந்தியா திரும்ப உள்ளார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரி முதல் வாரம் குழந்தை பிறக்க உள்ளதால் அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்.
ரோஹித், இஷாந்த் நிலை
இந்த நிலையில், காயத்தால் சிகிச்சை பெற்று வந்த ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா டெஸ்ட் தொடரில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்தது. ரோஹித் சர்மா டிசம்பர் 11 அன்று தன் உடற்தகுதியை நிரூபித்தால் ஆஸ்திரேலியா செல்வார் என கூறப்படுகிறது.
இஷாந்த் சர்மா குணமடைந்தார்
இஷாந்த் சர்மா காயம் முழுமையாக குணமடைந்து விட்டது. அவர் ஐபிஎல் தொடரின் பாதியில் காயம் காரணமாக இந்தியா வந்து சிகிச்சையை தொடங்கி இருந்தார். அவர் குணமடைந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் 20 ஓவர்கள் வீசும் அளவுக்கு இன்னும் தகுதி பெறவில்லை என கூறப்படுகிறது.
நான்கு வாரங்கள்
அவர் இன்னும் நான்கு வாரங்கள் பந்து வீசி உடற்தகுதியை நிரூபித்தால் தான் அவருக்கு ஆஸ்திரேலியா செல்ல ஒப்புதல் அளிக்கப்படும் என தேசிய கிரிக்கெட் அகாடமி அறிவித்துள்ளது. இதை அடுத்து அவர் பாதியில் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதும் கேள்விக் குறியாகி உள்ளது.
நீக்கம்
இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா நான்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரை ஆஸ்திரேலியா அனுப்பி ஒரீரு டெஸ்ட் போட்டிகளிலாவது ஆட வைத்திருக்கலாம்.
முடிவு சரியா?
எனினும், தேசிய கிரிக்கெட் அகாடமி அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி காயம் குணமான நிலையிலும் இஷாந்த் சர்மாவை நீக்கி இருக்கிறது பிசிசிஐ. ரசிகர்கள் சிலர் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர். சிலர் இது இளம் வீரர்களுக்கான வாய்ப்பு என கூறி வருகின்றனர்.