துவக்கம் யார்?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஷிகர் தவானுடன், ஷுப்மன் கில் இந்தப் போட்டியில் துவக்க வீரராக இறங்கினார்.
தவான்
தவான், கில் இருவரும் நிதானமாக ரன் சேர்த்தனர். தவான் நிறைய பந்துகளை டாட் பாலாக ஆடி வீணடித்தார். ஆஸ்திரேலிய அணி முந்தைய இரண்டு போட்டிகளிலும் 350 ரன்களை கடந்து பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்த நிலையில் இந்திய அணியும் அதே போல பெரிய இலக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
நிதானம்
ஆனால், துவக்கமே படுநிதானமாக இருந்தது. தவான் 27 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஸீன் அபாட் பந்துவீச்சில் ஆஷ்டன் அகர்-இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 5.5 ஓவரில் 26 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
ஜோடி
அடுத்து ஷுப்மன் கில் - விராட் கோலி ஜோடி சேர்ந்து பேட்டிங் செய்தனர். இவர்கள் இருவரும் சீரான வேகத்தில் ரன் குவித்தனர். எனினும், துவக்கத்தில் குறைவான ரன் ரேட்டில் ஆடியதால் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டது.
திணறல்
ஷுப்மன் கில் 33, ஸ்ரேயாஸ் ஐயர் 19, கேஎல் ராகுல் 5 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். விராட் கோலி மட்டுமே ஒருபுறம் நின்று நிலையாக ரன் குவித்தார். அவரும் விக்கெட் வீழ்ச்சியின் காரணமாக அதிரடி ஆட்டம் ஆட முடியாமல் திணறினார்.
கோலி, பாண்டியா
கோலி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா அரைசதம் கடந்தார். எனினும், இந்திய அணி குறைந்த ரன் ரேட்டிலேயே கடைசி வரை ஆடியது. துவக்கத்தில் வீணடித்த பந்துகளால் இந்திய அணியின் பேட்டிங் சிக்கியது.