காயம்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி ஐந்து வீரர்களை காயத்தால் இழந்தது. கேப்டன் விராட் கோலியும் விடுப்பில் இருக்கிறார்.
மூன்று இளம் வீரர்கள்
இந்த நிலையில், இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் இரு அறிமுக வீரர்கள் மற்றும் ஒரு ஓவர் கூட பந்து வீசி இருக்காத ஒரு வீரர் என மூன்று வீரர்களை பந்துவீச்சாளர்களாக ஆட வைத்தது. அந்த வீரர்கள் நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்குர்.
இந்தியா பதிலடி
ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்த இந்திய அணி, பேட்டிங்கில் 336 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. வாஷிங்க்டன் சுந்தர் 62, ஷர்துல் தாக்குர் 67 ரன்கள் குவித்தனர். இந்திய அணியின் இந்த போராட்டம் பற்றி ஷோயப் அக்தர் பாராட்டி இருக்கிறார்.
சிறுவர்களை வைத்து ஆடும் இந்தியா
"இது தான் இந்திய அணியின் அழகு. பல வீரர்கள் இழந்தாலும் அந்த சிறுவர்களை வைத்து ஆடி வருகிறது. அவர்கள் இப்படி ஒரு நேரத்தில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவோம் என நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்" என்றார் அக்தர்.
எதிர்த்து ஆடிய இளம் வீரர்கள்
மேலும், "கடைசி டெஸ்டில் பும்ரா இல்லாத நிலையில், பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில், பெரும்பாலான அணி இல்லாத நிலையில் இந்த இளம் வீரர்கள் எதிர்த்து ஆடி, முழு பலத்துடன் இருக்கும் ஆஸ்திரேலியாவின் மரண அடியை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்." என புகழ்ந்து தள்ளினார்.