கிரிக்கெட் கிளப்
சேலத்தை சேர்ந்த சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். அங்கே தன் வீட்டின் அருகில் இருந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் உதவியுடன் உள்ளூர் கிரிக்கெட் கிளப்பில் இருந்து டிவிஷன் கிரிக்கெட் ஆடத் துவங்கினார். பின் தமிழ்நாடு அணியிலும் இடம் பெற்றார்.
தடை
2015இல் ரஞ்சி தொடரில் ஆடிய அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அவரது பந்துவீச்சு முறை சரியாக இல்லை எனக் கூறி அதை சரி செய்யும் வரை அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின் அவர் 15 மாதங்கள் பந்துவீச்சை சரி செய்ய போராடினார்.
ஏன் இந்த தடை?
டென்னிஸ் பந்தில் மட்டுமே அதிகமாக பந்து வீசி இருந்த அவர், பந்து வீசும் போது உடலில் இருந்து கை விலகிச் செல்லுமாறு வீசி வந்தார். அது ஐசிசியின் பந்து வீச்சு விதிகளுக்கு மாறாக இருந்ததாக கூறப்பட்டதால் அவருக்கு அப்போது தடை விதிக்கப்பட்டு இருந்தது.
13,000 பந்துகள்
முன்னாள் தமிழ்நாடு வேகப் பந்துவீச்சாளர் சுனில் சுப்பிரமணியம் உதவியுடன் அவர் பயிற்சி செய்யத் துவங்கினார். வெளி உலகுக்கு தெரியாமல் சுமார் 13,000 பந்துகளை வீசி இருந்தார். தன் பந்துவீச்சை மாற்றி அமைத்த பின்னரே அவருக்கு கிரிக்கெட் ஆட அனுமதி கிடைத்தது.
சாதாரண விஷயம் அல்ல
அது அத்தனை சாதாரண விஷயம் அல்ல. சுமார் இரண்டு மாதங்கள் அவர் வெறும் இரண்டு அடி மட்டுமே ஓடி பந்து வீசி பயிற்சி செய்தார். அதன் பின் ஒரு ஸ்டம்ப்பை மட்டுமே வைத்து அவர் பந்துவீசினார். அதன் பின்னரே பேட்ஸ்மேன்களுக்கு அவர் பந்து வீசினார்.
சாதாரண விஷயம் அல்ல
இந்த தீவிர பயிற்சிகள் ஒரு வகையில் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டுக்கான தயார்நிலையாக அமைந்தது. இந்த பயிற்சிகளுக்கு பின் அவர் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி மிரட்டினார். அங்கே இருந்து ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற்றார்.
ஐபிஎல்
ஐபிஎல் தொடரில் 2017இல் பஞ்சாப் அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில், 2020 ஐபிஎல் தொடர் வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் காத்திருந்து தன் திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் நடராஜன். ஐபிஎல் தொடரில் தன் யார்க்கர்களால் பெயர் பெற்றார்.
கடும் வலி
தற்போது அவர் இந்திய அணியிலும் நுழைந்து தன் முத்திரையை பதித்துள்ளார். யார்க்கர் கிங் என இப்போதே அழைக்கப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளார். அவரது வளர்ச்சி இன்று பார்க்க பெரிதாக இருந்தாலும் அதன் பின் கடும் வலியை அவர் அனுபவித்துள்ளார்.