பந்துவீச்சு
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி இடம் பெற்றனர். இவர்களில் முகமது ஷமி மட்டுமே 10 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
வாரி இறைத்த பந்துவீச்சாளர்கள்
பும்ரா, நவ்தீப் சைனி இருவரும் ரன்களை வாரி இறைத்தனர். ஆளுக்கு ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினர். பும்ரா 10 ஓவர்களில் 73 ரன்களும், நவ்தீப் சைனி 10 ஓவர்களில் 83 ரன்களும் வாரி இறைத்தனர். சுழற் பந்துவீச்சாளர் சாஹல் 89 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
வாய்ப்பு கிடைக்குமா?
சாஹல், பும்ரா முன்னணி பந்துவீச்சாளர்கள் என்பதால் அவர்களுக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், நவ்தீப் சைனி கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளார். அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏமாற்றம்
கேப்டன் விராட் கோலி அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் நம்பி வாய்ப்பு அளித்தும் அவர் சொதப்பி இருந்தார். தற்போது அவர் இந்திய அணியிலும் ஏமாற்றம் அளித்துள்ளார். இந்த நிலையில் அவரை விராட் கோலி அடுத்த போட்டியில் நீக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நடராஜன்
நவ்தீப் சைனிக்கு காயம் இருப்பதால் மாற்று வீரராக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்ட நடராஜன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
அறிமுகம் ஆவாரா?
இந்திய அணியின் வலைப் பயிற்சிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். யார்க்கர் பந்துவீச்சில் வல்லவரான அவரை ஒருநாள் போட்டியில் களமிறக்கவே அவரை மாற்று வீரராக அணியில் சேர்த்ததாகவும் பேசப்படுகிறது. தமிழக வீரரான நடராஜன் இந்திய அணிக்காக அறிமுகம் ஆவதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.