கூடுதல் வீரர்
2020 ஐபிஎல் தொடரில் தன் யார்க்கர் பந்துவீச்சால் மிரள வைத்த நடராஜன், அடுத்ததாக ஆஸ்திரேலிய செல்ல இருந்த இந்திய அணியில் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டார். பின் வருண் சக்கரவர்த்தி காயத்தால் விலகியதை அடுத்து அவர் டி20 அணியில் மட்டும் இடம் பெற்றார்.
அணியில் வாய்ப்பு
அடுத்து ஒருநாள் அணியில் நவ்தீப் சைனிக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட அவர் கடைசி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு பெற்று சிறப்பாக பந்து வீசி தன் முதல் சர்வதேச போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தினார். டி20 தொடரிலும் அவருக்கு முழுமையாக வாய்ப்பு கிடைத்தது.
அசத்தல் ஆட்டம்
டி20 தொடரில் மூன்று போட்டிகளில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். அதன் மூலம் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக அவர் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நிலை உருவானது. அவர் டி20 தொடர் முடிந்த உடன் இந்தியா திரும்புவார் என்றே முதலில் கூறப்பட்டது.
டெஸ்ட் அணி
ஆனால், டெஸ்ட் அணி வேகப் பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக அவரை ஆட வைக்கலாம் என முடிவு செய்த இந்திய அணி நிர்வாகம் அவரை ஆஸ்திரேலியாவிலேயே தங்க வைத்தது. அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கும் வரை காத்திருப்பில் இருந்தார்.
வாய்ப்பு கிடைக்கும்
தற்போது இரண்டாவது டெஸ்டில் காயம் அடைந்த உமேஷ் யாதவ்வுக்கு பதில் நடராஜனை அணியில் ஆட வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
வியப்பு
இப்படி பயிற்சியில் பந்து வீச சென்ற நடராஜன், அடுத்தடுத்து ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி என வரிசையாக வாய்ப்பு பெற்று கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். இதற்கு முன் எந்த வீரரும் இப்படி வரிசையாக ஒரே தொடரில் வாய்ப்பு பெற்றதாக தெரியவில்லை.