நடராஜன் அறிமுகம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 0 - 2 என இரண்டு போட்டிகளின் முடிவில் இழந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டார்.
முதல் விக்கெட்
தன் முதல் போட்டியில் அவர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த தொடரில் இதுவரை பவர்பிளே ஓவர்களில் இந்திய அணி விக்கெட் வீழ்த்தாத நிலையில், நடராஜன் அதை உடைத்து பவர்பிளே ஓவரில் மார்னஸ் லாபுஷாக்னே விக்கெட்டை வீழ்த்தினார்.
2 விக்கெட்கள்
அதே போல 48வது ஓவரில் ஆஷ்டன் அகர் விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பை தகர்த்தார். 10 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். தன் முதல் சர்வதேச போட்டியிலேயே அவர் கவனம் ஈர்த்தார்.
வைரல்
இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த நடராஜனை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டார். அந்தப் பதிவு வைரலாக பரவி வருகிறது. அதில் மண்ணின் மைந்தன் எனக் கூறி நடராஜனை வாழ்த்தி உள்ளார் முதல்வர்.
முதல்வரின் வாழ்த்துப் பதிவு
இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்.