டெஸ்ட் தொடர் வெற்றி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது வரை எல்லாமே சரியாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய அணியுடன் நட்பு பாராட்டினார்கள். ஆனால், அடுத்து மெல்போர்ன் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற உடன் எல்லாமே மாறியது.
சீண்டல்
இந்திய வீரர்களை வெளியில் இருந்தும், களத்திலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். களத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா டிரா செய்ய முயன்ற போது பொறுமை இழந்து சீண்டினார்.
திட்டினார்
அஸ்வினை பேட்டிங் செய்ய விடாத அளவுக்கு பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அஸ்வினை திட்டவும் செய்தார். எனினும், அந்தப் போட்டியை இந்தியா டிரா செய்தது. கடைசிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து தொடரை 2 - 1 என இந்தியா வென்றது.
விவாதம்
ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும், அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் நடந்து கொண்ட விதம் தான் தொடரின் முடிவில் பெரும் விவாதத்தை கிளப்பியது. அவரை கேப்டன் பதவியை விட்டு நீக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
வாட்டர் பாய்
இந்த நிலையில் அவர் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக ஆடச் சென்றார். அவருக்கு களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் மற்ற வீரர்களுக்கு போட்டியின் இடையே குளிர்பானம் எடுத்துச் செல்லும் வாட்டர் பாயாக மட்டுமே அந்த அணியால் பயன்படுத்தப்பட்டு வருகிறார்.
ரசிகர்கள் கிண்டல்
இதை இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அவருக்கு இது தேவை தான் என சிலரும், டி20 போட்டிகளில் அவருக்கு உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது என சிலரும் கூறி அவரை கேலி செய்துள்ளனர். டிம் பெய்ன் டெஸ்ட் அணியில் நீடிப்பது சந்தேகமே!