ஒருநாள் போட்டி
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்றது
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் பின் இந்திய அணியில் செய்துள்ள மாற்றங்கள் பற்றி குறிப்பிட்டார் கேப்டன் கோலி.
கேதார் ஜாதவ் நீக்கம்
கடந்த ஒருநாள் தொடர்களில் இந்திய அணியில் இடம் பெற்று வந்த கேதார் ஜாதவ் அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இந்திய அணியில் ஒரே நேரத்தில் மூன்று துவக்க வீரர்கள் பங்கேற்றது தான்.
ராகுலுக்கு இடம்
தவான் காயத்தில் இருந்த போது ராகுல் சிறப்பாக ஆடி அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனால், அணியில் தவானுக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
கடைசி வாய்ப்பு
ரோஹித் சர்மா ஓய்வில் இருந்த நிலையில், தவானுக்கு இலங்கை டி20 தொடரில் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தொடரில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார் தவான். அதை அடுத்து அவரை அணியில் இருந்து நீக்க முடியாத நிலை ஏற்பட்டது.
குழப்பம்
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியதால் ரோஹித், தவான், ராகுல் மூவருக்கும் எப்படி அணியில் இடம் அளிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஆச்சரியம் அளித்த கோலி
இந்த நிலையில், கேப்டன் கோலி அணியில் கேதார் ஜாதவ்வை நீக்கி விட்டு, ரோஹித் சர்மா, தவான், ராகுல் மூவரையும் பேட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் களமிறக்கி ஆச்சரியம் அளித்தார்.
பேட்டிங் வரிசை மாற்றம்
வழக்கமாக மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் கோலி, அணிக்காக நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய முன்வந்தார். இந்த மாற்றத்தால், அணியில் வேறு ஒரு குழப்பமும் ஏற்பட்டது.
கூடுதல் பந்துவீச்சாளர் இல்லை
ஜாதவ் இல்லாத நிலையில், இந்திய அணி கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாமல் களமிறங்கியது. சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை கொண்டு ஆஸ்திரேலிய பேட்டிங்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.
இந்திய அணி
இந்திய அணி விவரம் : ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், பும்ரா, ஷமி