சேலத்தை சேர்ந்த நடராஜன்
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். டென்னிஸ் பந்தில் யார்க்கர் பந்துவீச்சு செய்து வந்த அவரை அடையாளம் கண்டு தமிழக அளவிலான போட்டிகளில் ஆடச் செய்தனர். அவரது யார்க்கர் பந்துவீச்சு கவனம் பெற்றது.
டிஎன்பிஎல் தொடர்
டிஎன்பிஎல் டி20 லீக் தொடரில் அவர் பங்கேற்றார். அதில் அவரது சிறப்பான பந்துவீச்சை கண்ட பலரும் அவரை ஐபிஎல் தொடரில் ஆட சரியான வீரர் என கூறி வந்தனர். ஆனால், அவர் மாநில அளவிலான போட்டிகளில் கூட ஆடி இருக்கவில்லை.
சேவாக் முடிவு
இந்த நிலையில், வீரேந்தர் சேவாக் அவரது பந்துவீச்சு வீடியோக்களை பார்த்துள்ளார். 2017இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்த அவர் நடராஜனை வாங்க முடிவு செய்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் அவரை குறி வைத்து ஏலம் கேட்டார்.
3 கோடி
2017 ஐபிஎல் ஏலத்தில் நடராஜனை 3 கோடி கொடுத்து பஞ்சாப் அணிக்காக வாங்கினார் சேவாக். ஆனால், அப்போது நடராஜன் யார், அவரை ஏன் சேவாக் 3 கோடி கொடுத்து வாங்கினார் என்ற கேள்வி எழுந்தது. பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர்.
இவர் ஒரு பிளேயரா?
உள்ளூர் போட்டிகளில் கூட ஆடாத ஒருவரை ஏன் இத்தனை பெரிய விலை கொடுத்து வாங்கினீர்கள்? இவர் பெரிய பிளேயரா? என பலரும் அப்போது தன்னை கேள்வி கேட்டதாக சேவாக் தற்போது குறிப்பிட்டுள்ளார். அந்த சீசனில் காயம் காரணமாக நடராஜன் அனைத்து போட்டிகளிலும் ஆட முடியவில்லை.
அணி மாற்றம்
ஆனால், நடராஜன் ஆடிய போட்டிகளில் எல்லாம் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆனால், அவரது பந்துவீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் அடுத்த சீசனில் அவரை விடுவித்தது பஞ்சாப், அவர் ஹைதராபாத் அணிக்கு மாறினார்.
ஐபிஎல் தந்த வாழ்வு
2020 ஐபிஎல் தொடரில் மீண்டும் போட்டிகளில் ஆட வாய்ப்பு பெற்ற அவர் தன் யார்க்கர் பந்துவீச்சு மூலம் எதிரணிகளை திணற வைத்தார். ஒரே சீசனில் 71 யார்க்கர் பந்துகளை வீசி கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.
இந்திய அணி வாய்ப்பு
தற்போது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. டி20 அணியில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால், ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக சேவாக் கூறி உள்ளார்.