கோலியின் அணித் தேர்வு
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து அணியை மாற்றி வருவது பல ஆண்டுகளாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் டி20 போட்டியில் பங்கேற்கவில்லை.
ஏன் நீக்கம்?
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் மனிஷ் பாண்டே அணியில் பங்கேற்றார். ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரில் 2, 38, 19 என சராசரியாகவே ரன் எடுத்து இருந்தார். ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஆட்டமிழந்து இருந்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.
தொடர்ந்து மாற்றப்படும் வீரர்கள்
இந்திய அணியில் இதே போல ஒவ்வொரு தொடரிலும் பேட்ஸ்மேன்களை மனம் போன போக்கில் மாற்றி வருகிறார் கேப்டன் விராட் கோலி. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் நிலையான மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை இல்லை.
தைரியம் இருக்காது
இது பற்றி விமர்சனம் செய்துள்ள சேவாக், ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த டி20 தொடரில் நன்றாக ஆடி உள்ளார். ஆனால், அவரை ஆஸ்திரேலிய டி20 தொடரில் நீக்கி உள்ளனர். இதற்கு என்ன காரணம்? அதை கேட்க ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூட தைரியம் இருக்காது என்றே நினைக்கிறேன் என்றார்.
சிறப்பான ஆட்டம்
அணியின் சமநிலை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருந்தால் இது சரி. ஆனால், அவரால் ஷார்ட் பிட்ச் பந்துகளை ஆட முடியவில்லை என நினைத்து நீக்கி இருந்தால் தவறு. அவர் கடந்த டி20 தொடரில் சிறப்பாக ஆடி உள்ளார் என்றார் சேவாக்.
கோலிக்கு விதிவிலக்கு
மேலும், இந்திய அணியில் அனைத்து விதிகளும் எல்லோருக்கும் பொருந்துகிறது, கோலியை தவிர.. அவரது பேட்டிங் ஆர்டர் மாறுவதே இல்லை. அவர் பார்மில் இல்லை என்றால் அவர் நீக்கப்படுவது இல்லை. ஏன் இப்படி அணியில் தவறாக நடக்கிறது? என சேவாக் சரமரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தோனி தான் என்றும் கேப்டன்
2014 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கோலி மோசமாக ஆடிய போது கோலிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் எப்படி அவர் பெரிய வீரராக மாறி இருப்பார்? அவரே தோனி தான் என்னை ஆதரித்தார். என்றுமே அவர் தான் என் கேப்டன் என கூறி உள்ளார் என சுட்டிக் காட்டினார் சேவாக்.
யாராவது சொல்வாரா?
தோனியை விராட் கோலி பெருமையாக கூறியது போல, இப்போது உள்ள வீரர்கள் யாராவது கேப்டன் விராட் கோலியை பெருமையாக எனக்கு வாய்ப்பளித்தார் எனக் கூறுவார்களா? அது கடினம் எனவும் விளாசி இருக்கிறார் சேவாக்.