மேக்ஸ்வெல் செயல்பாடு
ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் 2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 10.75 கோடிக்கு வாங்கப்பட்டார். அதிரடி ஆல்-ரவுண்டரான அவர் இந்த சீசன் முழுவதும் ஏமாற்றம் அளித்தார். பேட்டிங்கில் 13 போட்டிகளில் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை.
இந்தியா - ஆஸி. தொடர்
அடுத்து நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவர் அதிரடி ஆட்டத்தால் மிரள வைத்தார். 3 டி20 போட்டிகளில் 78 ரன்களும், 3 ஒருநாள் போட்டிகளில் 167 ரன்களும் குவித்தார் மேக்ஸ்வெல். ஐபிஎல் தொடரில் சிக்ஸ் அடிக்காத அவர் டி20 தொடரில் 5 சிக்ஸ், ஒருநாள் தொடரில் 11 சிக்ஸ் அடித்து மிரட்டி இருந்தார்.
காரணம் என்ன?
ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்ட அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய போது மட்டும் எப்படி சிறப்பாக செயல்பட்டார்? அவர் ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர வீரராக இடம் பெறவில்லை. எனவே, அவர் சரியாக ஆடாமல் போனால் அணியில் இடத்தை இழக்க நேரிடும். இதுவே காரணம் என கூறப்படுகிறது.
சேவாக் விளாசல்
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் துவங்கும் முன் மேக்ஸ்வெல்-இன் ஐபிஎல் செயல்பாட்டை சேவாக் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். மேக்ஸ்வெல் 10 கோடி செலவில் பஞ்சாப் அணிக்கு கிடைத்த சியர்லீடர் என கிண்டல் செய்து இருந்தார்.
பதிலடி தந்த மேக்ஸ்வெல்
அந்த விமர்சனத்துக்கு பதிலடி தந்த மேக்ஸ்வெல் சேவாக் தன்னை வெறுப்பதை வெளிப்படையாக செய்து வருகிறார். அவர் என்னை பற்றி பேசியதன் மூலம் ஊடகங்களில் பேசப்படுகிறார் எனக் கூறி சேவாக் இதை பரபரப்புக்காக மட்டுமே கூறுவதாக பதிலடி கொடுத்தார்.
மீண்டும் விமர்சனம்
தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் மேக்ஸ்வெல் சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், சேவாக் அதையும் விமர்சனம் செய்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்காக ஆடும் போது அவரின் குணம் மாறுகிறது. அங்கே அவர் இரண்டு, மூன்று மோசமான இன்னிங்க்ஸ் ஆடினால் அணியில் இடம் மறுக்கப்படும். அதன் பின் அணிக்கு திரும்ப முடியாது என்பதை உணர்ந்து ஆடுகிறார் என்றார்.
ரன் அடிப்பதை தவிர
ஆனால், அந்த அழுத்தத்தை அவர் ஐபிஎல் தொடரில் உணரவில்லை. அங்கே அவர் கொண்டாட மட்டுமே சென்றார். போட்டியில் ரன் குவிப்பதை தவிர வீரர்களை தட்டிக் கொடுப்பது, இங்கேயும், அங்கேயும் செல்வது, நடனம் ஆடுவது என எல்லாமே செய்தார் என்றார் சேவாக்.
போட்டி முடிந்த உடன்..
மேலும், போட்டி முடிந்த உடன் அவருக்கு இலவசமாக பானங்கள் கிடைக்கும். அதை அறைக்கு எடுத்து செல்வார். அல்லது அறைக்கு சென்று அங்கே நிறைய பானங்களை அருந்துவார் என விளாசினார் சேவாக். அது என்ன "பானம்" என்பதை சேவாக் வெளிப்படையாக கூறவில்லை.
முயற்சி செய்யவில்லை
மேலும், மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் போட்டிகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு முயற்சி செய்யவில்லை. ஏனெனில், அத்தனை தீவிரமாக இருந்தால் அது அவரது செயல்பாட்டில் தெரிந்து இருக்கும் என்றார் வீரேந்தர் சேவாக்.