கிரிக்கெட் அரசியல்
இந்தியாவில் அரசியல் இல்லாத இடமே இல்லை. எங்கு பணம், புகழ் உள்ளதோ அங்கே அரசியலும் இருக்கும். கட்சிகளைத் தாண்டிய இந்த அரசியல் இந்தியாவில் கிரிக்கெட்டிலும் உள்ளது. காரணம், அங்கே புழங்கும் பணமும், கிடைக்கும் புகழும் தான்.
கிராமம்
இந்தியாவில் சாதாரண கிராமத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அத்தனை எளிதில் தேசிய அணியில் இடம் பெற்று விட முடியாது. முதலில் அதிக திறமை வேண்டும். பின் தன் திறமையை வைத்து அணியில் இடம் பெற சிபாரிசு வேண்டும். பிசிசிஐயில் செல்வாக்கு உள்ள ஒருவரின் ஆதரவு இல்லாமல் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் பெரிய அதிர்ஷ்டம் வேண்டும்.
தோனி ஏற்படுத்திய மாற்றம்
முதன் முதலில் கிரிக்கெட் பெரிய அளவில் முன்னேறாத ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தேசிய அணியில் இடம் பெற்று பெரு நகரங்களை தாண்டியும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என காட்டியது தோனி தான். அவருக்கு பின் அப்படி இடம் பெற்ற வீரர்கள் யாரும் நினைவில் இல்லை.
தொடர் புறக்கணிப்பு
தமிழக வீரர் நடராஜன் சேலத்தில் சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர். அவர் படிப்படியாக உயர்ந்து கடும் போராட்டத்தை அடுத்து தற்போது இந்திய அணியில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் நேரடியாக இந்த இடத்தை அடையவில்லை. நிறைய புறக்கணிப்புகளை சந்தித்தே முன்னேறி உள்ளார்.
டென்னிஸ் பால்
டென்னிஸ் பந்தில் உள்ளூர் கிரிக்கெட் ஆடி வந்த அவரை அடையாளம் கண்டு தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பில் பயிற்சிக்கு அழைத்து வந்தனர். அங்கே அவருக்கு மாநில அணியில் இடம் கிடைக்கவில்லை. டிஎன்பிஎல் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
மூன்று ஆண்டு முயற்சி
டிஎன்பிஎல் தொடரில் கலக்கிய அவர் பின் மாநில அணியில் வேறு வழியின்றி சேர்க்கப்பட்டார். அங்கே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என வாய்ப்பு பெற்ற அவர் தன் திறமையை சரியான முறையில் வெளிக்காட்ட மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாய்ப்பு
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். மாநில அணியில் கூட அவருக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையில், ஐபிஎல் அரங்கில் அவர் வெளிநாட்டு வீரர்களை திணற வைத்ததை பார்த்து வாய்ப்பு தேடி வந்தது.
தவிர்க்க முடியாத வீரர்
தான் பங்கேற்ற முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்திய அவர், அடுத்த 48 மணி நேரத்திற்குள் டி20 அணியில் அறிமுகம் ஆகி 3 விக்கெட்கள் சாய்த்தார். இந்தியஅணியில் தவிர்க்க முடியாத வீரர் என்ற பெயரை இரண்டே போட்டிகளில் சம்பாதித்துள்ளார்.
பெயர் பெற்றார்
அது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் "யார்க்கர்" நடராஜன் என்ற அடைமொழியை பெற்றார் அவர். அவரது ஆயுதமே யார்க்கர் தான் என்பதோடு, ஒரு போட்டியில் கடைசி ஓவரில் ஆறு யார்க்கர் வீசி மிரள வைத்ததால் அவருக்கு இந்தப் பெயர் கிடைத்தது.
எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்குமா?
கிராமத்தை சேர்ந்த அவர் கடந்த ஐந்து,ஆறு ஆண்டுகளில் நிறைய புறக்கணிப்புகளை சந்தித்து தன் 29 வயதில் தான் இந்திய அணியில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவரைப் போல பல நடராஜன்கள் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள்,. அவர்களுக்கும் மாநில அணிகள் மற்றும் தேசிய அணிகளில் வாய்ப்பு கிடைக்குமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.