தீபக் சாஹர் போராட்டம்
வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் நீண்ட காலமாக ராஜஸ்தான் அணிக்காக ஆடி வருகிறார். இந்திய அணியில் இடம் பெற நீண்ட போராட்டத்தை சந்தித்தார் அவர். 2019 ஐபிஎல் தொடர் அவருக்கு திருப்பத்தை ஏற்படுத்தியது.
ஐபிஎல் ஆட்டம்
2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக மாறினார் தீபக் சாஹர். அப்போது அவரது சிறப்பான பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்தது.
அணியில் தேர்வு
அதையடுத்து இந்திய டி20 அணியில் இடம் பெற்றார் தீபக் சாஹர். துவக்க ஓவர்களை வீசுவதில் தன்னை நிரூபித்து வந்த தீபக் சாஹர், கடைசி ஓவர்களை வீசுவதிலும் சிறப்பாக செயல்படத் துவங்கினார்.
சாதனை பந்துவீச்சு
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தி சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். அப்போது ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்து அசத்தினார்.
ஆகாஷ் சோப்ரா பதிவு
இந்த நிலையில், தீபக் சாஹர் எதிர்காலத்தில் பெரிய பந்துவீச்சாளராக வருவார் என அப்போதே கணித்து ட்விட்டரில் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. அந்த பதிவை இப்போது கண்ட ரசிகர்கள் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
|
என்ன பதிவு?
2010ஆம் ஆண்டு ஒருவர், இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதை ஆகாஷ் சோப்ராவிடம் கூறி இருக்கிறார். அப்போது அதற்கு பதில் அளித்த அவர், "நான் ஒரு இளம் வீரரை கண்டுபிடித்துவிட்டேன். ராஜஸ்தானை சேர்த்த தீபக் சாஹர். இந்த பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அவரை நிறைய பார்ப்பீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் வியப்பு
சரியாக 9 ஆண்டுகளுக்கு முன்பே தீப சாஹர் எதிர்காலத்தில் பெரிய பந்துவீச்சாளராக மாறுவார் என்பதை கணித்து வியக்க வைத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. அந்த பழைய பதிவை தேடி எடுத்த சில ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகிறார்கள்.
|
தேர்வுக் குழு தலைவர்
இந்திய அணிக்கு புதிய தேர்வுக் குழு நியமிக்கப் பட உள்ளதாக ஒரு தகவல் இருக்கும் நிலையில், ஒரு ரசிகர் ஆகாஷ் சோப்ராவை தேர்வுக் குழு தலைவராக நியமிக்கலாம் என கங்குலிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஐபிஎல் அணிகள்
நல்ல திறமையானவர்களை கண்டுபிடிக்க ஆகாஷ் சோப்ராவை பிடிங்க.. என ஐபிஎல் அணிகளுக்கு யோசனை கொடுத்து இருக்கிறார் மற்றொரு ரசிகர்.
தீர்க்கதரிசனம்
ஒரு ரசிகர் ஆகாஷ் சோப்ராவின் தீர்க்கதரிசனத்தை பாராட்டி இருக்கிறார். தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரது கருத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு தீபக் சாஹரை வெளிச்சத்துக்கு கூட்டி வந்து விட்டார்கள் எனவும் கூறி இருக்கிறார்.