வங்கதேச டெஸ்ட் தொடர்
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரில் 1 - 0 என முன்னிலையில் உள்ளது இந்தியா.
அஸ்வின் சாதனை
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 2 விக்கெட்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 3 விக்கெட்களும் வீழ்த்தினார் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் நல்ல பார்மில் இருக்கிறார். இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய போது இந்திய மண்ணில் 250 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை செய்தார்.
பகல் - இரவு டெஸ்ட்
முதல் டெஸ்டில் வென்ற இந்தியா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நவம்பர் 22 அன்று விளையாட உள்ளது, பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ள அந்தப் போட்டிக்கு பயிற்சி செய்ய இந்திய அணிக்கு போதிய கால அவகாசம் இல்லை.
கூடுதல் பயிற்சி
பிங்க் நிற பந்தை பயன்படுத்தி நடைபெற உள்ள அந்த டெஸ்ட் போட்டிக்கு சிறப்பு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சி தேவைப்படுகிறது. பிங்க் நிற பந்தின் செயல்பாடு வேறு மாதிரியாக இருப்பதால் அதற்கு வீரர்கள் பழக வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
முன்பே தொடங்கிய பயிற்சி
அதனால், இந்திய வீரர்கள் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இருந்தே பிங்க் நிற பந்தில் அதிக நேரம் பயிற்சி செய்து வருகின்றனர். ஆனால். அஸ்வின் பிங்க் நிற பந்தைக் காட்டிலும் வேறு வகையில் விசித்திர பயிற்சிகளை மேற்கொண்டார்.
|
லெக் ஸ்பின் பயிற்சி
முதல் டெஸ்ட் போட்டியின் போது பயிற்சி செய்த அவர் திடீரென லெக் ஸ்பின் வீசினார். ஆஃப் ஸ்பின்னரான அவர், லெக் ஸ்பின் பயிற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.
போட்டியில் வீசினார்
முதல் டெஸ்டின் இரண்டாம் இன்னிங்க்ஸில் ஒருமுறை லெக் ஸ்பின் வீசி பேட்ஸ்மேனை குழப்பினார் அஸ்வின். எனினும், அதன் பின் அந்த பரிசோதனையை அதிகம் தொடரவில்லை.
|
இடது கை பேட்டிங்
அதே போல, ஒரு முறை பயிற்சியில் இடது கையில் பேட்டிங் செய்து வியப்பை ஏற்படுத்தினார். அந்த வீடியோ லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றது. சிலர் ரிஷப் பண்ட்டை விட சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என பண்ட்டை கலாய்த்தனர்.
|
ஜெயசூர்யா பந்துவீச்சு
முதல் போட்டிக்கு பின் பிங்க் நிற பந்தில் பயிற்சி மேற்கொண்ட அஸ்வின் இடது கையில் பயிற்சி செய்தார். இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சனத் ஜெயசூர்யா போலவே இடது கையில் பந்து வீசினார். அது அஸ்வினுக்கு சரியாக அமையவில்லை.
எப்போதும் இப்படித்தான்
அஸ்வின் கடந்த காலத்தில் டிஎன்பிஎல் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இது போன்ற பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த பரிசோதனை முயற்சிகள் அவரது இயல்பான ஆட்டத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ரசிகர்களின் கவலை!